பரந்துபட்ட உள்ளம்

இயேசு அப்பங்களைப் பலுகச்செய்கிற புதுமையில் ஒரு சிறுவனின் செயல் பாராட்டுதற்குரியதாக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்கள்கூட்டத்திற்கும் அவனிடத்தில் இருந்த குறைந்த அப்பங்கள் போதாதுதான். ஆனால், அவன் கொண்டு வந்த உணவுதான், அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஒருவேளை அந்த சிறுவன் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றில் ஒரு புதுமை நடைபெறாமல் போயிருக்கலாம். இந்த புதுமை நமக்கு அருமையான செய்தியையும் தருகிறது.

நம்மிடம் இருப்பதை கடவுளிடம் நாம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அது குறைவானதாக இருக்கலாம். ஆனால், நல்ல மனதோடு நாம் கடவுளிடத்தில் கொண்டு வருகிறபோது, கடவுள் அவற்றை பலுகச்செய்து, ஆசீர்வதிப்பார். இன்றைக்கு புதுமைகள் நடக்காமல் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நம்மிடம் இருப்பதை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணங்கள், மக்கள் நடுவில் பெருகிவிட்டது. அந்த சிறுவனும் இதேபோல் நினைத்திருந்தால், அங்கிருக்கிற மக்கள் கூட்டம் தங்களது பசியைப் போக்கியிருக்க முடியாது. அந்த சிறுவனின் பரந்துபட்ட உள்ளம், இருப்பதை கடவுளிடம் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம், இழப்பதில் மகிழ்ச்சி என்கிற சிந்தனை, மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

நமது வாழ்விலும் நாம் கடவுளுக்கு கொடுப்பதற்கு தாராள உள்ளத்தைப் பெற வேண்டும். எவ்வளவு கொடுக்கிறோம் என்பது அல்ல, மாறாக, எத்தகைய உள்ளத்தோடு நாம் கொடுக்கிறோம் என்பதுதான், கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த நேர்மையான உள்ளத்தை, திறந்த உள்ளத்தை, பரந்துபட்ட உள்ளத்தை கடவுளிடம் கேட்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.