பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57

நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே.

எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல் பாவத்தைச் செய்தார்களோ, சிலுவை மரத்தினால் அதற்கு பாவக்கழுவாய் செய்யப்பட்டது. முதல் பாவம் செய்தவுடன் ஒருவர் மற்றவரை பழிசுமத்தினார்கள். ஆனால் இயேசு மற்றவர்களின் பழியையும் தன்மீது தாங்கி கொண்டு, இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என மன்னித்தார். முதல் பாவம் செய்தவுடன் அடையில்லாமல் இருந்தவர்கள் ஆடையை அணிந்து கொண்டார்கள். இயேசு தன் ஆடை அனைத்தையும் இழந்து நிர்வாணமாக, பிறந்த மனிதனைப்போல இருந்தார். முதல் பாவம் செய்தவுடன் ஆதாமும் ஏவாளும் தன்னை மறைத்துக் கொண்டார்கள், ஆனால் பாவக்கழுவாய் கல்வாரி மலையில் செலுத்தப்படும் போது இரண்டாம் ஆதாமும் (இயேசு) இரண்டாம் ஏவாளும் ( அன்னை மாயாள்) அனைவரும் ஓடி ஒழிந்த நிலையில் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக நின்றனர்.

இவ்வாறு மனிதகுலம் முழுவதையும் மீட்டு எடுக்க தன்னைப் பலியாக்கினார். இவ்வளவு விலையினைக் கொடுத்து மீட்கப்பட்ட நம் வாழ்வு எப்படியிருக்கிறது? இன்னும் பொருளுள்ளதாக மாற்ற திருப்பாடுகளின் வாரத்தில் அடிஎடுத்து வைப்போம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.