பவுலடியாரின் இறைப்பற்று

திருத்தூதர்பணி 20: 17 – 27

பவுலடியார் எபேசு நகரத்தைச் சேர்ந்த திருச்சபையின் மூப்பர்களை வரவழைக்கிறார். மூப்பா்கள் என்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள். எந்த ஒரு விவிலியப்பகுதியை வாசித்தாலும், எங்கே? ஏன்? எப்போது? யார்? என்ன? எப்படி? என, கேள்விகளை வைத்து, நாம் பதில் காண முயலுகின்றபோது, விவிலியம் நமக்கு சொல்ல வருகிற செய்தியை, ஓரளவு புரிந்து, கடவுள் நமக்கு சொல்கிற அறிவுரையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பகுதி பவுலின் மூன்றாவது திருத்தூதுரைக்கும் பயணத்தின் தொடக்கம் என்று சொல்லலாம் 18: 23 – 21: 16). திருத்தூதர் பவுல், அவருடன் இருந்தவர்கள் மற்றும் திருச்சபையின் மூப்பர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள். இடம்: மிலேத். பவுல் எதற்காக எபேசு சென்று அவர்களை சந்திக்கவில்லை? எதற்காக அவர்களை மிலேத்துவிற்கு வரவழைக்கிறார்? 20: 16 தெளிவாகச் சொல்கிறது: பவுல் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே, எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். முடியுமானால், பெந்தகோஸ்து நகரில் அங்கிருக்க வேண்டும் என்று விரைவாய்ச் சென்றார். இதுவரை தான் அவர்களோடு இருந்தகாலம் மட்டும், அவருடைய திட்டம் என்ன? எதற்காக அவர் சில திட்டங்களை முன்னெடுத்தார் என்பதை, விளக்கிக்கூறுகிறார்.

கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினேன், கடவுளின் திட்டம் எதையும் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தவே, அவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கைமுறைக்கான அறிவுரையாகவும் நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுக்கிற நிகழ்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. ”இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை” என்கிற வார்த்தைகள், மூப்பர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நடப்பதே, நான் அறிவித்த நற்செய்தி என்பதை பவுல் இங்கே வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி அவா் கவலைப்படவில்லை. மாறாக, கடவுள் முன்னிலையில் அவருடைய திட்டத்தை உறுதிப்படுத்துகிறவனாக இருக்கிறேனா? என்பது தான், அவருடைய சிந்தனையாக இருந்தது.

இன்றைக்கு நம்முடைய வாழ்வில், பல நேரங்களில் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். அடுத்தவர் நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை, தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை, கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறதா? என்பதுதான், நாம் கேட்கிற கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுக்கானதாக இருக்கக்கூடாது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.