மனநிலையும் வழிபாடும்

மத் 5 : 20 -26

கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும்.

இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்.

எடுத்துக்காட்டாக, கொலை செய்யாதிருப்பாயாக! என்பதில் ஒருவனை கொலை செய்வதை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் ஒருவனுடைய பெயரைக் கெடுப்பது, அவனுக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லுவது, புறங்கூறுவது, ஒருவனிடம் கோபம், வைராக்கியம் காட்டிப் பகைப்பது, இவையனைத்துமே நாம் ஒருவரை நம் மனத்தால் கொலை செய்வதற்குச் சமம் என்கிறார் இயேசு. சட்டங்களிலும், கட்டளைகளிலும் சொல்லப்படுவதைவிட நமது மனநிலையில்தான் மாற்றங்கள் வேண்டும். இதற்கான அழைப்பே இத்தவக்காலம், மனமாற்றத்திற்கானக்காலம்.

மிகவும் இன்றியமையாத இன்னொரு பாடத்தையும் இன்றைய நற்செய்தி இன்று நமக்குத் தருகிறது. பரிசேயர்களின் அறநெறி என்பது வாழ்க்கை எப்படியிருந்தாலும் பரவாயில்லை நம் வழிபாடு சரியாக இருக்க வேண்டும் என்றது. ஆனால் இயேசுவின் நெறியோ நமது வாழ்வினையும் வழிபாட்டினையும் பிரிக்க முடியாததாக அமைந்துள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என்பதை எடுத்துக் கூறுகிறது. செயலில் இல்லாத இறை நம்பிக்கை செத்த நம்பிக்கையே! இத்தவக்காலத்தில் நம் வழிபாட்டினை வாழ்வாக்குவோம்!

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.