“ரௌத்திரம் பழகு” !

“ரௌத்திரம் பழகு” என்றார் பாரதி தமது புதிய ஆத்திச்சூடியில். கோபப்படப் பழகு என்பது அதன் பொருள். பொதுவாக, சினம் என்பது ஒரு தவறான உணர்வுநிலைதான். பெரும்பாலான வேளைகளில், சினமும், சீற்றமும் மானிடரைக் குற்றப் பழிக்கு இட்டுச்செல்கின்றன என்பதுவும் உண்மைதான். இருப்பினும், கோபம் கொள்ளவேண்டிய வேளைகள் இருக்கின்றன. அவ்வேளைகளில் கோபம் கொள்ளாமல் இருப்பதுவும் தவறே என்பது இந்தப் புதிய ஆத்திச்சூடியின் பாடம்

அது உண்மைதான். எப்போது நாம் கோபம் கொள்ளவேண்டும்? நமக்கு தீமையோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதைப் பொறுத்துக்கொள்வதும், அமைதி காப்பதும் சிறந்த பண்புகள். ஆனால், பிறருக்குத் தீமை, அநீதி நிகழும்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காப்பது என்பது தவறு. அந்த நேரத்தில்தான் நமக்குக் கோபம் பொங்கி எழவேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6) இயேசு கொள்ளும் சினம் அத்தகையதே. தொழுகைக்கூடத்தில் கை சூம்பிய மனிதரைப் பார்த்தபோது, இயேசுவின் பரிவுள்ளம் அவரைக் குணமாக்கத் துடித்தது. ஆனால், அங்கிருந்தவர்களோ ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று “குற்றம் சுமத்தும் நோக்குடன்… அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்”. அதுமட்டுமல்ல, ஓய்வுநாளில் நன்மை செய்வது, குணப்படுத்துவது முறையா? என்று அவர்களிடம் இயேசு கேட்டபோது, அவர்கள் பிடிவாத உள்ளத்துடன் “பேசாதிருந்தார்கள்”. எனவேதான், இயேசு சினம் கொண்டார். அது நியாயமான சினம். அத்துடன், அந்த சினத்தின் விளைவாக அந்த மனிதரை இயேசு குணப்படுத்தினார். நாமும் நியாயமான சினம் கொள்வோமாக!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பிறருக்கு தீமையும், அநீதியும் இழைக்கப்படும்போதெல்லாம், நாங்கள் சினம் கொள்ளும் அருளைத் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்..

~ பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.