லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு விழா

தொடக்க கால திருச்சபையில், ஆலயங்களின் நேர்ந்தளிப்பு நாளையும், விழாவாகவே கொண்டாடினர். ஆலயங்களின் நேர்ந்தளிக்கும் நாள் என்பது, பேராலயத்தின் பிறந்த நாள் என்றழைக்கும் வழக்கமும் இருந்தது. உரோமை திருவழிபாட்டு மரபில், அர்ப்பணிக்கப்பட்ட பேராலயத்திற்கான நான்கு விழாக்களை திருச்சபை முழுவதும் கொண்டாடுகிறோம். லாத்தரன் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியாள் பேராலயம். இதில், லாத்தரன் ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

முதல் நூற்றாண்டில், நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை வதைத்து, பலபேரை கொன்றொழித்தது வரலாறு. அப்படி அவன் கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அவனுக்கு எதிராக சதிசெய்தவர் என்று, லாத்தரன் என்னும் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த பிளவுத்துஸ் லாத்தரன் என்பவர் கொல்லப்பட்டார். கொன்ற பிறகு, அந்த குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை, உடைமைகள் என்று, அவனுடைய சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டான். பின்னர் வந்த உரோமை அரசனான கான்ஸ்டன்டைன் அரசர், கி.பி.313 ம் ஆண்டு, கிறிஸ்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றினார். அப்போது, லாத்தரன் குடும்பத்தினரிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த சொத்தை, உரோமை ஆயருக்கு(திருத்தந்தை மெல்தியாதஸ்) அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த இடத்தில் அழகிய ஓர் ஆலயம், எழுப்பப்பட்டது. அதை, அவருக்குப்பின் வந்த திருத்தந்தை சில்வஸ்டர் புனித மீட்பருக்கு அர்ப்பணித்தார். கி.பி. 896 ல் நடந்த நிலநடுக்கத்தில், லாத்தரன் மாளிகை சேதப்பட்டது. கி.பி.904 முதல் 911வரை திருச்சபையை ஆண்ட திருத்தந்தை 3ம் செர்ஜியுஸ், அதை புதுப்பித்து, புனித திருமுழுக்கு யோவானுக்கு இதை அர்ப்பணித்தார். அதனோடு லாத்தரன் குடும்பப்பெயரும் சேர்த்து, புனித திருமுழுக்கு யோவான் லாத்தரன் ஆலயம் என்றும், வெறுமனே லாத்தரன் ஆலயம் என்றும், இது அழைக்கப்படலாயிற்று. உரோமை நகர கதீட்ரல் ஆலயம் இதுவேயாகும். பழமையான ஆலயமும் இதுவே ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை, இது தான், திருத்தந்தையர்களின் இல்லமாக விளங்கிவந்தது. 28 திருத்தந்தையர்களின் உடல்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து திருச்சங்கங்கள் இங்கு தான் நடைபெற்றது.

இங்கு தான், திருத்தந்தையர்களால் தொடக்கத்தில் திருமுழுக்கு அருட்சாதனங்களும், புனித வாரச்சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. உரோமையிலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆலயங்களுக்கும் இதுதான் தாய்க்கோயிலாகும். உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக்கோயிலும் (Cathedral) இதுதான்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.