வார்த்தையே வாழ்வு

யோவான் 8: 51-59

உண்மைக்கு சான்று கூறவே இயேசு வந்தார். உண்மையைக் கூறியதால் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றார்கள். “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றதால் அவர்மேல் கல் எறிய கற்களை எடுத்தார்கள் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த வார்த்தையை யூதர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலை ஆதாமில் முடிக்கிறார் (ஏறுவரிசை) ஆனால் யோவான் நற்செய்தியாளரோ இயேசுவின் உடனிருப்பை இவ்வுலகப்படைப்பின் தொடக்கத்திலிருந்தே இருப்பதை நம் கண்முன் கொண்டுவருகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது,” (யோவான் 1:1) இந்த வார்த்தை மனிதனாகிப் பேசிய பொழுது வல்லமையுள்ள வாழ்வளிக்கும் வார்த்தையாகவே இருந்தது. இதையே இயேசு “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார்.

நாம் வார்த்தையானக் கடவுளை வாழ்வாக்குவோம். அவரினைப்பற்றி இன்னும் அதிகம் அறிய, உணர இறைவார்த்தையை தினமும் வாசிப்போம். நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளிலும் அவரின் வார்த்தை நமக்கு விடுதலையளிக்கும். அவரின் வார்த்தையை வாழ்வாக்குவோர் தன் செயலினாலும் வாழ்வினாலும் என்றுமே வாழ்வார்கள்;.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.