வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18

தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த பவுலடியார், எந்த நேரத்திலும் தான் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை. எப்போதுமே, தன்னுடைய வாழ்வு கடவுளுக்கானது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

வெற்றுப்புகழுக்காக, பெயருக்காக எதனையும் செய்ய துணியும் மனிதர்கள் வாழும் உலகில், நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். நாம் பெற்றிருக்கிற இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த கொடை. அதை அவரை மகிமைப்படுத்தும் விதமாக வாழும் வரம் வேண்டி மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.