வாழ்வின் சுமைகளை பொறுமையோடு எதிர்கொள்வோம்

வயலில் விளையும் களைகள் விவசாயிகளின் சாபக்கேடு. அவை வளருகிற சமயத்தில் பிடுங்கவும் முடியாமல், வளரவிடவும் முடியாமல் ஒரு விவசாயிபடுகிற துன்பத்தைச் சொல்லிமாள முடியாது. ஏனென்றால், அவைகள் தொடக்கத்தில் கோதுமைப்பயிர்களையும், களைகளையும் அடையாளம் காண முடியாதபடி உருவ அமைப்பில் ஒத்திருக்கின்றன. களைகளை சிறியதாக இருக்கிறபோது பிடுங்குவது எளிது என்றபோதிலும், இரண்டுமே ஒரே போல இருப்பதால், தவறாக கோதுமைப்பயிர்களை பிடுங்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், இரண்டையும் வளரவிடுவார்கள்.

வளர்ந்தபிறகு கோதுமைப்பயிருக்கும், களைகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். ஆனாலும், இப்போது களைகள் நன்றாக தனது வேரை இறுகப்பாய்ச்சிருக்கும். இப்போது களைகளைப் பிடுங்கினால், அதோடு கோதுமையும் பிடுங்கப்பட்டுவிடும். எனவே, அறுவடை நேரம் வரை காத்திருந்து, பொறுமையாகக் களைகளையும், பயிர்களையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இந்த உலகத்தில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. பொறுமையோடு, நம்பிக்கையோடு, உறுதியாக அதைத்தவிர்க்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டோம் என்றால், காலம் கனிகிறபோது, அதை எதிர்த்து வெற்றி பெற முடியும்.

இன்றைய தலைமுறையினர் சோதனைத்தாங்குவதற்கு திடமற்றவர்களாக இருக்கின்றனர். வாழ்க்கை எப்போதும், ஒரேமாதிரி செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாகச் செல்கிறபோது, அவர்கள் அழுது அங்கலாய்க்கின்றனர். வாழ்வை அதன் வழியில் ஏற்றுக்கொண்டு, பொறுமையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.