வாழ்வியல் செபம்

இறைமகன் இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம் ஓர் அழகான இறையியலைக் கொண்ட செபம். ஒரு செபம் எப்படி இருக்க வேண்டும்? என்பதைச் சொல்வதைக்காட்டிலும், நமது அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை, நமக்கு கற்றுத்தரக்கூடிய செபம். நமது வாழ்வில், நமது இன்றைய நிலை என்ன? கடவுளைத் தேடுகிறோம். உணவிற்காக உழைக்கிறோம். சோதனைகளைச் சந்திக்கிறோம். தீய சிந்தனைகளுக்கு பலியாகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இதுதான்நமது வாழ்க்கை. இதனைக் கடந்து வாழ்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள்.

நமது வாழ்வில் கடவுள் தான் எல்லாமே என்பதை, இயேசு சிறப்பாக வெளிக்காட்டுகிறார். கடவுள் தான் நமது வாழ்வின் மையம். இது யூதர்களின் இறையியல். எதைச் செய்தாலும், எது நடந்தாலும், ஏதாவது ஒரு வழியில், வகையில் அதில் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, கடவுள் தான் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த தேவையாக, நமக்கு உண்ண உணவு, உடுக்க துணி, உறங்க உறைவிடம். இந்த அடிப்படைத் தேவைகளை கடவுள் நமக்கு வழங்க நாம் கடவுளிடத்தில் செபிக்கவும், அதற்காக உழைக்கவும் அழைக்கப்படுகிறோம். அதன்பிறகு நமது வாழ்க்கை முறையை சீர்தூக்கிப் பார்க்க அழைப்புவிடுக்கிறது. நமக்கு வரக்கூடிய சோதனைகள், நமது பலவீனங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை தரக்கூடியவர் கடவுள் மட்டும் தான். எனவே, நமது முயற்சியோடு கடவுளின் அருளுக்காகவும் மன்றாடுகிறோம்.

இந்த இறைவேண்டலை வெறும் செபமாக மட்டும் நினைக்காமல், நமது வாழ்வியல் சிந்தனையாகவும் வாழ முயற்சிப்போம். இதில் வரக்கூய சிந்தனைகளை நமது வாழ்வாக மாற்ற முனைவோம். அதுவே நமது வாழக்கை கடவுளை நோக்கியதாக இருக்க உதவியாக இருக்கும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.