விவேகமுள்ள பணியாள்

அறிவாளி யார்? அறிவீனன் யார்? என்பதற்கு இயேசு இன்றைய உவமை வாயிலாக பதில் சொல்கிறார். மத்திய கிழக்குப் பகுதியில், வேலைக்காரர்களுக்கு அதிகமான அதிகாரத்தை தலைவர் கொடுத்திருந்தார். ஒரு வேலைக்காரன் அடிமையாக இருக்கலாம். ஆனால், மற்ற வேலைக்காரர்களுக்கு, அவனைப் பொறுப்பாக தலைவர் நியமிக்கிறபோது, அவனுக்கு நிச்சயம், அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுகிற அதிகாரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே, அறிவாளி, மற்றவன் அறிவீனன் என்பது, இயேசு தரக்கூடிய செய்தி.

அறவீனனாக இருக்கிற வேலையாள் இரண்டு தவறுகளைச் செய்கிறான். 1. ”தன் மனம் நினைத்ததை செய்ய வேண்டும்” என்று தனக்குள்ளாக நினைக்கிறான். தலைவர் அவனிடம் பொறுப்பைத்தான் விட்டிருக்கிறார். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, தலைவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது வேலைகளை நான் செய்துகொண்டிருப்பேன், என்று நினைக்காமல், தலைவர் இருந்தால் ஒன்று, இல்லையென்றால் ஒன்று, என்று, அவன் நினைக்கிறான். இது நேர்மையற்றத்தனம். 2. ”தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்”. தான் செய்வது நேர்மையற்றத்தனம் என்பது, அந்த வேலைக்காரனுக்கு தெரிந்தே இருக்கிறது. அப்படியே, தான் செய்வது நேர்மையற்றத்தனமாக இருந்தாலும், தலைவர் வருவதற்குள்ளாக, அனைத்தையும் சரிசெய்து, தனது தவறை மறைத்துக் கொள்ளலாம், என்று அவன் நினைக்கிறான். தவறை தெரிந்தே செய்துவிட்டு, அதை மறைக்கவும் முயல்வது, மிகப்பெரிய பாதகச்செயல். அதைத்தான், அந்த வேலைக்காரன் செய்கிறான். அதற்கான பரிசையும், அவன் பெற்றுக்கொள்கிறான்.

கடவுள் தந்திருக்கிற வாழ்வை இதனோடு ஒப்பிடலாம். கடவுள் தான் நம் தலைவர். நாம் தான், வேலைக்காரர்கள். இந்த உலகமே என் கையில்தான். நான் நினைத்ததைச் செய்வேன், என்று நினைப்பதும் தவறு. செய்த தவறை, கடவுளிடமிருந்து மறைத்துவிடலாம், என்று மறைக்க நினைப்பது, தவறு மட்டுமல்ல. அறிவீனமும் கூட. கடவுள் கொடுத்த வாழ்வை, நேர்மையாக வாழ முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.