வீண் கவலை வேண்டாம்

வீணாக, தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்பது தான், இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குக் கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தில் நாம் பலவற்றை நினைத்து கவலைப்படுகிறோம். நமது பிள்ளைகளை நினைத்து, அவர்களது கல்வி வளர்ச்சியை எண்ணிப்பார்த்து, அவர்களது திருமண காரியங்களை நினைத்து, அவர்கள் நல்ல வேலையில் அமர வேண்டும் என்று, இதுபோன்று பல காரியங்களை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால், இவையனைத்துமே தேவையில்லாத கவலைகள். எதற்கு நாம் கவலைப்பட வேண்டுமோ, அவற்றை நினைத்து நாம் கவலைப்படுவது கிடையாது.

நமது ஆன்மீக காரியங்களில் நமக்கு உள்ள ஈடுபாடு சிறப்பாக இருக்கிறதா? நமது ஆன்மா சார்ந்த வளர்ச்சி காரியங்களில் நான் முழுமையாக பங்கெடுக்கிறேனா? பிள்ளைகள் கடவுளுக்கும், மனச்சான்றுக்கு பயந்து நடக்கிறார்களா? பெரியவர்களை மதிக்கிறார்களா? அவர்கள் கடவுள் சார்ந்த காரியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுக்கிறார்களா? நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்களா? இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும். இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக எண்ண வேண்டும். ஆனால், நாம் இதுபோன்று வாழ்விற்கு வழிவகுக்கும் காரியங்களில் ஈடுபடாமல், தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதை, இயேசு தவிர்க்க அறிவுறுத்துகிறார்.

நமது வாழ்விலும், இந்த உலகத்தின் எண்ண ஓட்டத்தோடு நாம் போய்விடாமல், அதையும் கடந்து சிந்திப்பதற்கு நாம் முயற்சி எடுப்போம். அதையும் கடந்து சிந்திப்பதற்கு நாம் நம்மையே பக்குவப்படுத்துவோம். அதுதான், நமது ஆன்மாவிற்கு, ஆன்மீகத்திற்குமான சரியான உணவாக, சரியான தயாரிப்பாக இருக்க முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.