வெற்றி வசப்படும்

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று – என்கிற இந்த வரிகள், திருப்பாடல் 118: 22 லிருந்து எடுக்கப்பட்டது. திருப்பாடல் ஆசிரியர் இந்த உருவகத்தை இஸ்ரயேல் மக்களுக்குப் பயன்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள். யூதர்கள் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள மக்களாலும் வெறுக்கப்பட்டவர்கள். அவர்கள் நாடு முழுவதிலும் அடிமைகளாக, வேலையாட்களாக வாழ்ந்தவர்கள். ஆனால், அவர்களைத்தான் கடவுள் சிறப்பாக தேர்ந்து கொண்டார். இதனைத்தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகள் மூலமாக விளக்குகிறார்.

இந்த திருப்பாடல் வரிகளில் வருவதைப்போல, இயேசுவும் விலக்கப்பட்ட மனிதராகவே ஆதிக்கவர்க்கத்தாலும், அதிகாரவர்க்கத்தாலும் பார்க்கப்படுகிறார். அவர்கள் மக்களை தூண்டிவிட்டு அவரை, கொலை செய்ய நினைக்கிறார்கள். அவரை ஒதுக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், விரைவிலே, தாங்கள் யாரை ஒதுக்க நினைத்தோமோ அவர் தான், கடவுளின் திருமகன், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், கடவுளின் ஆவியைப்பெற்றவர் என்பதை அறிந்துகொள்வார்கள். தாங்கள் செய்த செயல்களை நினைத்து, மனம் வருந்துவார்கள்.

இந்த சமுதாயம் ஒதுக்கிவைத்த பலபேர் தங்களது கடின முயற்சியால், இடைவிடாத உழைப்பினால் வாழ்வில் முன்னேறி வந்துள்ளனர். பல சாதனைகளைப் படைத்துள்ளனர். நாம் மற்றவர்களால் வெறுக்கப்டுகிறபோது, ஒதுக்கப்படுகிறபோது மனம் உடைந்து போக வேண்டாம். சாதிக்க வேண்டும் என்கிற ஆவலோடு உழைப்போம். முயற்சி செய்வோம். நிச்சயம் வெற்றி நம் வசம் கிட்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.