வேற்றினத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்

திருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8

கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை.

வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு, நேர்மையோடு நடக்கிற மனிதர்களுக்கு பல ஆசீரை வழங்கினார். அதேவேளையில் அவர்கள் தவறு செய்தபோது, அவர்களைத் தண்டிக்கவும் கடவுள் தாமதிக்கவில்லை. அவர்களை தண்டிப்பதற்கு முன்னதாக எச்சரித்தார். மனம் மாறுவதற்கு அழைப்புவிடுத்தார். அவர்கள் கடவுளின் குரலுக்கு செவிகொடுக்காதபோது அதற்கான தண்டனையை வழங்கினார். ஆக, கடவுள் எல்லாருக்குமான கடவுள் என்பதும், ஆள்பார்த்துச் செயல்படாதவர் என்பதும், அனைவரையும் அன்பு செய்கிறவராக இருக்கிறார் என்பதும் இங்கு தெளிவாக்கப்படுகிறது.

கடவுளை நாம் வெகு எளிதாக அணுக முடியும் என்கிற செய்தி இந்த திருப்பாடல் வழியாக நமக்கு வழங்கப்படுகிறது. அது எவ்வாறெனில், நீதியோடு நாம் வாழ முயற்சி எடுக்கிறபோது கடவுள் நம்மைத் தேடி வருகிறவராக, நம் துயர் துடைக்கிறவராக மாறுகிறார். அந்த இறைவனை நேர்மையான உள்ளத்தோடு அணுக நாம் உறுதி எடுப்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.