அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5
”அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”

யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.

எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக் கொள்ள வேண்டும். அந்த இல்லத்தில் நுழைய நாம் அகமகிழ்வோடு செல்ல வேண்டும். பொதுவாக, இந்த உலக வாழ்வை முடிப்பதற்கு யாருமே விரும்புவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம்முடைய அன்புக்குரியவர்களை விட்டுப்பிரிவது என்பது எளிதானது அல்ல. நம்முடைய உறவுகளோடு வாழ்வதற்கே நாம் விரும்புகிறோம். இந்த உலகத்தின் மீது, தனிப்பட்ட பாசம் வைத்திருக்கிறோம். எனவே தான், இந்த உலகத்தை விட்டுப் பிரிகிறபோது, நம்மை கவலை வாட்டுகிறது. ஆனால், விண்ணக இல்லத்திற்கு நாம் செல்வதற்கு மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும். மீண்டும் நம்முடைய உறவுகளை விண்ணகத்தில் சந்திக்கப்போகிறோம் என்கிற உணர்வோடு, மகிழ்ச்சியோடு நாம் நமது வாழ்வை வாழ வேண்டும்.

இந்த உலகத்தின் மீது நாம் பற்று கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால், விண்ணகத்தை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அது தடையாக இருக்கக்கூடாது. விண்ணகத்திற்கு நாம் செல்வதற்கு மகிழ்ச்சியை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வை வாழ, நாம் அனைவரும் முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.