அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75

செக்கரியா கடவுளை மீட்பராக அறிமுகப்படுத்துகிறார். செக்கரியா ஆலயத்தில் பலி செலுத்தக்கூடிய குருவாக இருக்கிறார். சாதாரண மக்களை விட, அவருக்கு திருச்சட்டத்தைப் பற்றிய அறிவுத்தெளிவு அதிகமாகவே இருக்கும். சாதாரண மக்களை விட, நடக்கிற நிகழ்வுகளை, உன்னிப்பாக பார்ப்பது அவருக்கு இயல்பானது. ஏனென்றால், இஸ்ரயேல் வரலாற்றையும், வாக்களிப்பட்ட மீட்பரையும், அவர் வரவிருக்கிற நேரத்தையும் அவரால் கணிக்க முடியும். அதைத்தான் இறைவாக்காக இன்றைய பாடல் வழியாக அவர் உணர்த்துகிறார்.

செக்கரியாவைப் பொறுத்தவரையில் காலம் கனிந்துள்ளதாகச் சொல்கிறார். என்ன காலம் கனிந்துள்ளது? கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து, நோய்நொடியிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பு அளிக்க இருப்பதாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கடவுள் மக்களை அனைத்து அடிமைத்தனத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்க இருக்கிறார். அது நடக்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தவராக, அந்த செய்தியை அறிவிக்கிறார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த மெசியா தோன்றிவிட்டார் என்கிற மகிழ்ச்சியான செய்தி தான், இந்த பாடலின் சாராம்சமாக இருக்கிறது.

இறைவன் நம்மோடு இருந்து நம்மை மீட்கிறவராக இருக்கிறார் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது. இறைவனின் அன்பையும், அவர் நம் மேல் வைத்திருக்கிற கனிவான அன்பையும் இது உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இறைவனின் அன்பை முழுமையாக உணர்வோம். எந்நாளும் அவரது திருப்பெயரை செக்கரியாவைப் போல போற்றுவோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.