அன்பை நம்மேல் பொழிந்திடும் ஆண்டவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்புக்கூர்ந்தார். யோவான் 3: 16. இந்த உலகில் வந்த யாவரையும் மீட்கும்படி தமது அன்பு முழுவதையும் நம்மேல் பொழிந்து நமக்கு நித்திய வாழ்வை அளித்திருக்கிறார்.

நாம் கவலை அற்றவர்களாய் வாழும்படி நம்முடைய சுமையை அவரேசுமந்து நமக்கெல்லாம் இளைப்பாறுதலை தந்திருக்கிறார். கனிவும், மனத்தாழ்மையும் உள்ள ஆண்டவர் நமது நுகத்தை அவர்மேல் ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளித்துள்ளார். அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவருக்காகவே நாம் இருக்கின்றோம். அதற்காகவே நம்மை படைத்துள்ளார். அந்த அன்பின் தெய்வத்தின் வழியில் நடந்து இளைப்பாறுதலை பெற்றுக்கொள்வோம். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.

ஆண்டவரின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் . அவரின் அன்புக்கு அழிவே இல்லை. இந்த உலகில் எந்த ஒரு கடவுளும் செய்யாத காரியத்தை நம்முடைய ஆண்டவர் நமக்கு செய்திருக்கிறார். அன்பின் மகத்துவத்தையும்,வல்லமையையும், நமக்கு புரிய வைக்கவே மனித உருக்கொண்டு இந்த உலகிற்கு வந்தார். தமது உயிரையும் கொடுத்தார். மனிதர்கள் நம்மை வெறுக்கலாம், பகைக்கலாம், ஆனால் ஆண்டவர் ஒருபோதும் நம்மை கைவிடவே மாட்டார்.  உங்கள் தேவைகளை அவரிடம் சொல்லி பெற்றுக்கொள்ளலாம். அன்பை பொழிந்த ஆண்டவர் ஒவ்வொருவரின் தேவைகளையும் சந்திப்பார். நாம் நமது நம்பிக்கையில் நிலைத்திருந்து அவர் கொடுக்கும் ஆசீர்வாதத்தை பெற்று மகிழ்வோம்.

எங்கள் கோட்டையும், அரணுமான ஆண்டவரே!

உம்மை போற்றுகிறோம், வணங்குகிறோம். அடைக்கலான் குருவிக்கு வீடும், சிட்டுக்குருவிக்கு கூடும் கிடைக்க செய்த நீர் உமது சாயலாக உமக்காக படைக்கப்பட்ட எங்கள்மேல் இரக்கமாயிருந்து யாவையும் தருவீர் என்று நம்புகிறோம். உமது அன்பை நாங்கள் அசட்டை செய்யாமல் நீர் விரும்பும்படி வாழ்ந்து உமக்கே மகிமையை செலுத்துகிறோம். உமது அன்பை நாங்கள் ஒருபோதும் மறந்து செயல்படாதவாறு காத்துக்கொள்ளும். ஒவ்வொருநாளும் எங்களுக்கு துணையாய் இருந்து எங்களை ஆறுதல் படுத்தி வருவதற்காய் உமக்கு நன்றி சொல்கிறோம். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே உண்டாகட்டும். கிறிஸ்து இயேசுவின் வழியாய் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பரம தந்தையே!ஆமென்!அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.