அருங்குறிகளும், அடையாளங்களும்

இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களை ஒட்டுமொத்தமாக தீய தலைமுறையினராகக் குறிப்பிடுகிறார். எதற்காக இயேசு அவர்களை இப்படிச்சொல்ல வேண்டும்? அவர்கள் செய்த தவறு என்ன? பொதுவாக, அந்த மக்கள் யாரையும் நம்புவதற்கு அற்புதங்களைச் செய்யச்சொன்னார்கள். ஒருவரை நம்புவதற்கு அவர்களின் செய்கின்ற மாய, தந்திரங்கள் தான் அளவுகோல். அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவர் நம்புவதற்கு உகந்தவர் அல்ல என்பது அவர்களின் கண்ணோட்டம்.

இயேசுவையும் அத்தகைய கண்ணோட்டத்தோடு மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மத்தியில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவர்கள் நம்புவதற்கு அவர் செய்த புதுமைகளே போதும். ஆனாலும், அவர்கள் இயேசுவிடத்திலே அருங்குறிகளைச் செய்யச்சொல்கிறார்கள். இது இயேசு முதல்முறையாக அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கல்லை அப்பமாகவும், மலையிலிருந்து கீழே குதிக்கவும், அலகையை வணங்கவும் சொல்கிற அந்த சோதனைகளில், இயேசுவை இறைமகன் என அறிந்திருந்தும், இயேசுவை சோதிப்பதற்காக இவைகளை அலகை சொல்கிறது. அதேபோல்தான், மக்களுடைய எண்ணங்களும். கடவுளை நாம் சோதிக்க முடியாது. கடவுளின் வல்லமையை நாம் சந்தேகிக்க முடியாது.

அருங்குறிகளாலும், அற்புதங்களாலும் மட்டும் நமது விசுவாசம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது உண்மையான விசுவாசம் அல்ல. அந்த விசுவாசம் நிலைத்திராத விசுவாசம். எப்போது வேண்டுமானாலும், அது பலவீனமாகலாம். கடவுளை நம்புவதற்கு அடையாளங்களும், அற்புதங்களும் நமக்குத்தேவையில்லை. கடவுள் மட்டில் உண்மையான நம்பிக்கை போதும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.