அவரைப் போல …

மத்18:21-35
என் மட்டில் கடவுளின் அன்பு அளவற்றது என்பதை மறந்து பிறர் செய்த தவறுகளை நான் மன்னிக்கின்றேனா என்பதை சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு, நாம் இன்னும் ஆன்மீகத்தில் ஆழச் செல்ல உதவுகின்றது. மன்னிக்கின்றவனே வாழத் தெரிந்தவன், வலிமையானவன். ஆனால் பல நேரத்தில் நாம் பிறரை அடக்கி ஆளும் போதும், பிறர் என் பேச்சினை அப்படியே கடைபிடிப்பார்கள் என்று கூறுவதில்தான் பெருமை கொள்கிறோம். பிறரைப் பழி வாங்குவதே சிறந்த தலைமைப் பண்பு என்று எண்ணி வாழ்ந்து வருகிறோம். காரணம் இவ்வுலகம், குறிப்பாக மாயக் கவர்ச்சிகளைக் கொண்ட திரைப்படங்களின் கதைக்கரு அனைத்தும் பழிவாங்கும் படலமாகவே இருக்கின்றது. பழிவாங்குபவனே கதாநாயகன், மன்னிப்பவன் கோழை என்ற மனநிலைக்கு இன்றைய உலகம் நம்மைத் தள்ளி விட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி நம் முதுகில் தட்டி ‘திரும்பிப் பார் ராஜா’ என்று அன்போடு அழைக்கின்றது.

உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என் கடனையெல்லாம் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் அரசனோ பெருந்தன்மையுடன் அவன் மேல் கருணை கூர்ந்து அவனது கடனையும், தண்டனையையும் நீக்குகிறார். அவனுக்கு விடுதலைக் கொடுக்கிறார். இவனுடைய விடுதலை கண்டிப்பாக அடுத்தவருக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களை அடிமைப்படுத்தக் கூடாது. இவனின் மிகப்பெரிய கடன்தொகையை (குற்றத்தை) மன்னித்து, அரசன் இவனிடமிருந்து எதிர்பார்ப்பதும் கருணையையும், மன்னிப்பையுமே! இதில் இறுதியாக நாம் கவனிக்கக் கூடியது என்னவென்றால்,

1. நாம் மன்னிக்கப்படுவது பிறரை மன்னிப்பதற்கே!
2. நாம் மன்னிக்கப்பட்ட தவறை மீண்டும் செய்தோமென்றால் அதனுடைய தண்டனையும் கூடுதலாக சேர்த்துக் கொடுக்கப்படும்.

எனவே, ஒருவருக்கொருவர் மன்னித்து வாழ, எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் பாவத்தை வெறுங்கள். பாவம் செய்தவரை வெறுக்காதீர்கள். இறை மன்னிப்பை நாம் நாள்தோறும் உணருவதால் நம் மன்னிப்பையும் மற்றவர்கள் உணரட்டும்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.