ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்

திருப்பாடல் 30: 1, 3, 4 – 5, 10 – 11, 12
”ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்”

கடவுள் நல்லவர். கடவுள் பொறுமையுள்ளவர். கடவுள் மன்னிப்பு வழங்குகிறவர். இப்படி பல நல்ல பண்புகளை கடவுளுக்கு நாம் கொடுக்கிறபோது, கடவுளால் எப்படி தீமை செய்கிறவர்களைத் தண்டிக்க முடியும்? கடவுள் ஏன் தண்டிக்கிறார்? இது போன்ற கேள்விகள் கடவுளின் பண்புகளைக் கேள்விக்குள்ளாக்கும். கடவுளின் அன்பையும், கருணையையும் முழுமையாக உணர்ந்த, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர் அதற்கான பதிலைத்தருகிறார்.

கடவுள் கோபப்படக்கூடியவர் தான். எப்போது நாம் தவறு செய்கிறோமோ, எப்போது இந்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கி, இந்த வாழ்வியல் நெறிகளை, இயற்கையின் இயல்புகளைச் சிதைக்கிறோமோ, அப்போது, பொங்கி எழக்கூடியவர். வலியவன் எளியவனை அடக்கி ஆள நினைக்கிறபோது, அவர்களை அடிமைப்படுத்த நினைக்கிறபோது, அதனை தட்டிக்கேட்கிறவர் தான். ஆனாலும், கடவுளின் கோபம் நம்மை அழிக்க நினைப்பது அல்ல, கண்டித்து திருத்துவது மட்டுமே. நாம் நல்லவர்களாக வாழ வேண்டும், திருந்தி, திரும்பி கடவுளிடம் வர வேண்டும் என்பது மட்டும் தான். எனவே தான், அவர் எவ்வளவுக்கு கோபப்பட்டாலும், நாம் மனம் திருந்தி கடவுளிடம் வருகிறபோது, உடனடியாக அவர், நம் மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார். அதுதான் கடவுளின் உண்மையான அன்பு.

கடவுளின் அன்பை நாம் புரிந்துகொண்டால், நிச்சயம் நாம் தவறு செய்ய தயங்குவோம். அப்படியே தவறு செய்தாலும், உடனடியாக கடவுளிடம் ஓடோடி வருவோம். நமது பாவங்களுக்காக மனம் வருந்துவோம். கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் முழுமையாக உணர வேண்டி, இந்த திருப்பாடலை தியானிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.