ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a)

நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது.

மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர் பெற்றவர்களை வலதுபுறத்தில் ஒன்று சேருமாறு கட்டளையிடுகிறார். இவ்வாறு, வலது கரம் முக்கியமான ஒன்றின் அடையாளமாக விவிலியத்திலும் சரி, நமது வாழ்க்கையிலும் சரி அடையாளப்படுத்தப்படுகிறது. முற்காலத்தில், வலது கரம் ஆசீர்வாதத்தை வழங்கக்கூடிய அடையாளமாகவும் இருந்தது. இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள், தங்களது பிள்ளைகளுக்கு வலது கரத்தை வைத்து, ஆசீர்வதித்தார்கள். ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது என்கிற இந்த வரிகள், கடவுளின் பலத்தையும், அவர் எதிரிகளின் மீது கொண்டிருக்கிற வல்லமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நமது வாழ்க்கையில் கடவுள் பல்வேறு தீமைகளுக்கு எதிராக நம் சார்பில் இருந்து போராடுகிறார். நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவரது பலம், நமக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு. நமக்கு பாதுகாப்பும் புகலிடமும் அளிக்கக்கூடிய இறைவனிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.