ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது

திருப்பாடல் 37: 3 – 4, 5 – 6, 23 – 24, 39 – 40

நேர்மையாளராக வாழ வேண்டுமா? நேர்மையாளராக இந்த உலகத்தில் வாழ முடியுமா? இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விட்டு வைக்குமா? நேர்மையாளர்களாக வாழ்கிறபோது, நமது நண்பர்களை நாம் இழக்க நேரிடும். நமது உறவுகள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விடும். இவையெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? – இது போன்ற கேள்விகள் நிச்சயம் நமது உள்ளத்தில் எழும். இத்தனை கேள்விகளுக்கும் இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் பொறுமையாக பதில் தருகிறது.

நேர்மையாளர்கள் துன்பங்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றலை இறைவன் வழங்குவார். அவர் நேர்மையாளர்களின் கால்களை உறுதிப்படுத்துவார். தாங்கள் நின்றுகொண்டு இருக்கக்கூடிய நேர்மை என்னும் விழுமியத்தை முழுமையாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்கு, ஆண்டவர் உடனிருப்பார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாம் வீழ்ந்து போக ஆண்டவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால், நேர்மையாளர்களை எதிர்க்கிறவர்கள், இந்த உலகத்தின் துணைகொண்டு எதிர்க்கிறார்கள். ஆனால், ஆண்டவரோ நேர்மையாளர்கள் பக்கம் இருக்கிறார். வெற்றி என்பது நேர்மையாளர்களுக்கு மட்டுமே உரியது.

நேர்மையாளர்களாக வாழ்வதுதான் கடவுளுக்குரிய வழி. நேர்மையாளர்களாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு இருந்தாலும், அதனால் வரக்கூடிய துன்பங்களைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற உறுதியும், நம்பிக்கையும் நமக்கு நேர்மையானவர்களாக வாழக்கூடிய பலத்தை நிச்சயம் தரும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.