ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்

திருப்பாடல் 147: 1 – 2, 3 – 4, 5 – 6

காத்திருத்தல் என்பது சுகமான அனுபவம். அது சுமையான அனுபவமாகவும் இருக்கலாம். ஒரு மாணவர் தேர்விற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார். தன்னை முழுவதுமாக தயாரித்திருக்கிறார். அந்த மாணவருக்கு தேர்வு எப்போது வரும்? தான் தேர்வில் எப்போது கலந்துகொண்டு, என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார். அதேவேளையில், பேருந்துக்காக காத்திருக்கிற மனிதர், ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால், அவரது மனம் பதைபதைத்துக்கொண்டே இருக்கும். ஆக, காத்திருத்தல் சுகமாகவும், சுமையாகவும் இருக்கிறது.

ஆண்டவருக்காகக் காத்திருப்பது இது போன்ற அனுபவம் தான். ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையில் செயலாற்றுவார் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் இறைவனை நம்புகிறோம். அப்போதும் அது நடக்கவில்லை. பெரும்பாலான மனிதர்கள் இந்த தருணத்தில், நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காத்திருத்தல் சுமையாகிவிடுகிறது. ஆனால், என்ன நடந்தாலும் சரி, கடவுள் மீது நான் வைத்திருக்கிற நம்பிக்கையில் நாம் அடிபிறழ மாட்டேன், என்று உறுதியாக இருப்பவர்கள் தான், நற்பேறு பெற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் இறைவனின் முழுமையான அன்பிற்கு பாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்.

நம்முடைய விசுவாச வாழ்வில் நாம் எப்போதும் இறைவன் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையிலிருந்து அடிபிறழக் கூடாது. உறுதியுள்ளவர்களாக, ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்கிற உணர்வுள்ளவர்களாக நாம் வாழ வேண்டும். அந்த நம்பிக்கையை இந்த திருப்பாடலிலிருந்து கற்றுக்கொள்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.