ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் பேறுபெற்றோர்

திருப்பாடல் 112: 1 – 2, 3 – 4, 9

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் பேறுபெற்றோர் என்று சொல்லும் திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக வாழ்வர் என்பதை, இந்த திருப்பாடலில் விளக்கிக்கூறுகிறார். ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்வது எளிதான காரியம் அல்ல. அது நெருப்பின் மீது நடப்பது போன்றது ஆகும். ஆனால், கடவுள் நம்மோடு இருப்பார். தீயின் தாக்கம் நம்மைத்தாக்காத அளவிற்கு, நம்மோடு அவர் உடன் பயணிப்பார்.

ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்கிறவர்கள் எப்போதும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவ்வளவு கடினமான வாழ்க்கையை, அவர்கள் நம்பிக்கையோடு வாழ்வார்கள். அது மட்டுமல்ல, ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடியவர்களிடத்தில் காணப்படக்கூடிய முக்கியமான மூன்று பண்புகள்: அருள்மிக்கவர்கள், இரக்கம் உள்ளவர்கள், நீதியோடு வாழ்கிறவர்கள். நம்முடைய வாழ்வில் நாம் கடவுளுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்றால், இவற்றை நம்முடைய வாழ்வாக்க வேண்டும். கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறபோது, நமக்கு நிச்சயம் சோதனைகள் வரும், தீங்குகள் நடக்கும். அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறபோது, நாம் பேறுபெற்றவர்களாக, நீதிமான்கள் கூட்டத்தில் இடம்பெறுகிறவர்களாக மாறுகிறோம்.

ஆண்டவர்க்கு அஞ்சி வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மிடத்தில் இருக்கிறதா? என்று நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். ஆண்டவர்க்கு அஞ்சி வாழ வேண்டும் என்கிற அந்த உணர்வில் நாம் வாழ்வோம், நிச்சயம் கடவுள் நம்மை வழிநடத்துவார்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.