ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23

இறைவனை மறந்துவிட்ட, முற்றிலும் புறக்கணித்து விட்ட மக்களுக்கு விடுக்கப்படும் அறைகூவல் தான், இந்த திருப்பாடல். ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது அனைவருடைய கடமை. ஆனால், அதைக்கூட செய்யாமல், நன்றி உணர்வு இல்லாமல் வாழ்கிற மக்களுக்கு இந்த பாடல், திருந்தி வாழ அழைப்புவிடுக்கிறது. இறைவன் தொடக்கத்தில் இருந்து இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா நன்மைகளையும் இந்த பாடல் நினைவுறுத்துகிறது.

இஸ்ரயேல் மக்கள் சிலை வழிபாட்டில் தங்களையே முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறவர்களாக இருந்தனர். சிலை வழிபாடு என்பது சிலைகளை வழிபடுவது என்பதாக மட்டும் அர்த்தம் கிடையாது. மாறாக, உண்மையான இறைவனை மறந்து, தவறான வழிபாட்டு முறைகளை கடைப்பிடிப்பது. தங்களுக்கு நன்மைகள் செய்த இறைவனை அவர்கள் மறந்தார்கள். வேற்றுத்தெய்வங்களை வழிபட்டார்கள். இவ்வளவு செய்தும் அவர்களை திரும்ப ஏற்றுக்கொண்ட, கடவுளின் நன்மைத்தனத்தைப் பார்க்காமல், அவர் செய்த நன்மைகளை பொருட்படுத்தாது, நினைவில் கொள்ளாது வாழ்ந்தனர். இந்த தவறுகளை திருப்பாடல் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அவர் சுட்டிக்காட்டுவதின் நோக்கம், தவறுகளிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதுதான்.

நம்முடைய வாழ்வில் அவ்வப்போது, நாம் செய்யும் தவறுகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த தவறுகளை திருத்திக்கொள்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். தவறுகளிலிருந்து திருந்தி வாழ்வதே, இறைவனின் அன்பை முழுமையாகப் பெற்றுக்கொண்டதற்கான அடையாளமாக இருக்கிறது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.