ஆண்டவருடைய வார்த்தை அருமருந்து

தொழுகைக்கூடங்களில் இயேசு கற்பிப்பதற்கு உறுதியான எதிர்ப்பு கிளம்பிவிட்டது இன்றைய நற்செய்தியில் தெளிவாகிறது. எனவே, இயேசு தனது போதனையின் இடத்தை மாற்றுகிறார். இயேசுவின் போதனைக்கு இடையே வந்தவர்கள், யூதப்பாரம்பரியவாதிகள். ஏரிக்கரையில் நடந்துகொண்டு அவர் போதிக்கிறார். பாலஸ்தீனப்பகுதி போதகர்களின் போதனை இப்படித்தான் அமைந்திருக்கும்.

மத்தேயு மக்களால் வெறுக்கப்பட்ட மனிதர். ஏனெனில் அவர் ஒரு வரிதண்டுபவர். மத்தேயுவின் இதயத்தில் இது மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும். அவர் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும், இந்த சமுதாயம் அவர் பாவி என்று முத்திரை குத்தியிருக்கிறது. பாரம்பரிய யூதர்கள் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரத்தில் இயேசுவின் போதனை, அவருக்கு பெரிய ஆறுதல். இயேசுவின் போதனை அவருடைய உள்ளத்தை துளைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. மனம் மாற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இயேசுவின் வார்த்தை என்றுமே ஆறுதல்தான்.

ஆண்டவருடைய வார்த்தை, துன்பப்படுகிறவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. அது சாதாரணமாக வாசிக்கிறவர்களுக்கு அல்ல. மாறாக, உள்ளத்தில் துயரத்தினால், கவலையினால் வாடுகிறவர்களுக்கு மிகப்பெரிய அருமருந்து. இறைவார்த்தையில் நமது முழுமையான நம்பிக்கை வைப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.