ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

திருப்பாடல் 15: 2 – 3, 3 – 4, 5

“கூடாரம்” என்கிற வார்த்தை கடவுளின் இல்லத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கைப் பேழை கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த பிண்ணனியில் இந்த வார்த்தையை ஆசிரியர் பயன்படுத்துகிறார். கடவுளின் கூடாரத்தில் எல்லாருமே நுழைந்துவிட முடியாது. தகுதியுள்ளவர்கள் மட்டும் தான், நுழைய முடியும். கடவுளின் கூடாரத்தில் நுழைவதற்கான தகுதி என்ன? யாரெல்லாம் நுழைய முடியும்? என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கடவுளின் கூடாரத்தில் நுழைவதற்கு, நல்லதைச் செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, தீங்கினைச் செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். நல்ல மதிப்பீடுகளோடு வாழ வேண்டும். அதே வேளையில், தீய நெறிகளிலிருந்து விலக வேண்டும். உண்மை பேசுவதும். மாசற்றவராக நடப்பதும் கூடாரத்தில் தங்குவதற்கான நல்ல மதிப்பீடுகளாக நமக்குத் தரப்படுகிறது. அடுத்தவர்களை இழிவாகப்பேசுவதும், பொறாமை கொள்வதும், இறைவனின் இல்லத்தில் நுழைவதற்கு தடையாகச் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக, வட்டிக்குக் கொடுத்தலும், இலஞ்சம் பெறுவதும் கடுமையான குற்றங்களாகச் சொல்லப்படுகிறது.

நம்முடைய வாழ்வில் பல நல்ல மதிப்பீடுகளை நாம் கொண்டிருக்கலாம். அவையெல்லாம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். அதே வேளையில் நாம் செய்யக்கூடாத காரியங்களைக்குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போது நிச்சயம் நாம் கடவுளின் இல்லத்தில் வாழும் தகுதி பெறுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.