ஆண்டவரே! உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக

திருப்பாடல் 33: 4 – 5, 18 – 19, 20, 22

இறைவனுடைய மகிமையை, மகத்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான பாடல் இது. கடவுளைப் போற்றுவதும், புகழ்வதும் தான், இந்த பாடலின் மையக்கருத்து. நீதிமான்கள் கடவுளைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுளின் செயல்பாடுகள் மகிமைக்குரிதாக, வல்லமையுள்ளதாக, போற்றுதற்குரியதாக இருக்கிறது. கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற நம்பிக்கையோடு, கடவுளின் பிரசன்னம் எப்போதும் இருக்க வேண்டும் என்கிற செப வேண்டுதலோடு, இந்த பாடல் முடிவுறுகிறது.

கடவுளின் அன்பிற்காக திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலைப் பாடினாலும், விவிலியத்தில் கடவுள் எந்த அளவுக்கு மானுட சமுதாயத்தின் மீது அன்புள்ளவராக இருந்திருக்கிறார் என்பதை பார்க்கிறபோது, நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், கடவுளிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொண்ட மனிதர்கள், எப்போதுமே நன்றி இல்லாதவர்களாக, கடவுளுக்கே துரோகம் செய்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தொடக்க மனிதன் ஆதாம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் வரையிலும் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும், கடவுள் தன் அன்பிலிருந்து சிறிதும் மாறவில்லை. அவர் அன்பின் வடிவமாய், எரியும் தீபமாய், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் இருந்திருக்கிறார். அதைத்தான் இந்த திருப்பாடலில் நாம் கற்றுக்கொள்கிறோம். கடவுளின் பேரன்பை உணர்ந்து கொள்கிறோம்.

கடவுள் நம்மீது வைத்திருக்கிற அந்த அன்பிற்கு உரியவர்களாக நாம் வாழ எப்போதும் முயல வேண்டும். அன்பின் வடிவமாய் இருக்கிற ஆண்டவரிடம், நாம் எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த நன்றியை நமது வாழ்வில் பிரதிபலித்து வாழக்கூடிய மனதையும் கடவுளிடத்தில் கேட்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.