ஆண்டவரே! எனக்கு இரங்கியருளும்

திருப்பாடல் 26: 2 – 3, 9 – 10, 11 – 12

தவறு செய்த ஒரு மனிதன், தான் செய்த தவறை நினைத்து வருந்தி, இனிமேல் இப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன் என்றும், தன்னுடைய உள்ளத்தைப் பார்த்தால் தன்னுடை உண்மையான மனமாற்றம் புரியும் என்பதையும், இந்த திருப்பாடல் நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக, தாவீது ஒரு சிறந்த அரசர். மக்களுக்காகவே வாழ்ந்த அரசர். கடவுள் பயத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய அரசர். ஆனால், அவருடைய போதாத நேரம் தவறு செய்ய நேரிடுகிறது. அதன்பொருட்டு அவர் மிகவும் வருத்தப்படுகிறார். அந்த வருத்தத்தை இந்த பாடலில் பதிவு செய்கிறார்.

கடவுள் நீதிமானாக இருக்கிறார் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் நிச்சயமாக தவறு செய்தவர்களை தண்டிப்பார் என்பது இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது. அதேவேளையில், கடவுளின் தண்டனை, தாங்க முடியாததாக இருக்கிறது என்கிற பய உணர்வும் இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு மனிதனை அவனுடைய செயல்களால் மட்டும் தீர்ப்பிட்டுவிட முடியாது. ஒரு சிலர் ஏமாற்றுவதற்காக, மற்றவர்கள் முன்னிலையில் நல்ல செயல்களைச் செய்துவிட்டு, மறைவிலிருந்து மோசமான செயல்களில் ஈடுபடலாம். ஆனால், கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கிறவர். அவரது பார்வையிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. ஆக, இந்த திருப்பாடல் முழுவதும் கடவுளின் நீதி முழுமையாக வெளிப்படுகிறது.

நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், மனத்தளவில் நல்லவர்களாக வாழ வேண்டும். வெளிவேடக்காரர்களைப் போல், உள்ளொன்றும், புறமொன்றும் வைத்துப் பேசாமல், எந்நாளும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ வேண்டிய அருளுக்காக மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.