ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை

திருப்பாடல் 23: 1 – 3அ, 3ஆ – 4, 5, 6

இஸ்ரயேல் மக்கள் இயல்பிலேயே ஆடு மேய்ப்பவர்கள். ஆடு மேய்ப்பது என்பது அவர்களின் தொழிலாக இருந்தது. எங்கெல்லாம் மந்தைக்கு தேவையான மேய்ச்சல் நிலம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று, அவர்கள் ஆடுகளை மேய்த்தார்கள். ஆடுகளைத் தாக்க வரும் ஓநாய்களிடமிருந்து, அவர்கள் ஆடுகளைப் பாதுகாத்தனர். ஆயன் இருக்கிறபோது, ஓநாய்களால் ஆடுகளைக் கவர முடியாது. ஆயன் இருக்கிறபோது, ஆடுகள் பாதுகாப்பை உணர்ந்தனர். ஆயனும் அந்த ஆடுகளை வெறும் ஆடுகளாகப் பார்க்காமல் அவைகள் மீது, மிகுந்த பாசம் காட்டி மகிழ்ந்தான். இந்த உருவகத்தைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இன்றைய திருப்பாடலில், கடவுளுக்கு பயன்படுத்துகிறார்.

கடவுள் தன்னுடைய பிள்ளைகளை எப்போதும் வளமையாக வைத்திருந்தார். எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களை விடுவித்து வழிநடத்தினார். தாகத்தால் தவித்தபோது, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, தாகம் தணித்தார். உணவுக்காக ஏங்கியபோது, அவர்கள் எதிர்பாராத வண்ணம் அற்புதமாக உணவளித்தார். இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்தார். மேகத்தூணின் வாயிலாகவும், நெருப்புத்தூணின் வாயிலாகவும் அவர்களை வழிநடத்தினார். எதிரிகள் அவர்களைச் சூழ்ந்தபோது, அவர்களை விரட்டியடித்தார். இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்தார். இப்படி கடவுளின் பராமரிப்பை, திருப்பாடல் ஆசிரியர் நினைவுகூர்ந்து, அவர் செய்திருந்த அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் நினைவுகூா்ந்கிறார்.

நமது வாழ்வில் இறைவன் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நாமும் நினைத்துப்பார்க்க வேண்டும். கடவுளின் அருளும், வழிநடத்துதலும் இல்லையென்றால், இந்த உலகத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. அவர் தான், எல்லாவற்றிற்கும் முழுகாரணமாக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் நாம் முழுமைாக உணர்ந்து, இந்த திருப்பாடலை தியானிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.