ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை

திருப்பாடல் 23: 1 – 3, 4, 5 – 6
”ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை”

தொடக்கநூல் 49: 24 ல், மோசே கடவுளை ”ஆயர்” என்று முதன்முதலாவதாகச் சொல்கிறார். இங்கு தான், இஸ்ரயேலின் ஆண்டவரை ஆயர் என்று சொல்வதற்கு தொடங்கப்படுகிறது. ஒரு ஆயரின் பணியை தாவீது அரசர் முழுமையாக அறிந்தவர். ஏனென்றால், அவர் ஆடு மேய்க்கக்கூடிய பணியைத்தான் செய்து வந்தார். இறைவாக்கினர் சாமுவேல் ஈசாயின் புதல்வர்களை அணிவகுத்து நிற்கச்செய்து, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவனை அடையாளம் காண முற்பட்டபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை இறைவன் அவருக்கு அடையாளம் காட்டினார்.

பிற்காலத்தில் அரசராக அவர் அருட்பொழிவு பெற்றாலும், தன்னை ஆயராக மற்றவர்கள் அடையாளம் காண்பதில் பெருமை கொண்டார். ஏனென்றால், மக்களை ஆள்வதும் ஓர் ஆயர் போன்ற பணி தான். இந்த திருப்பாடலில், தாவீது கடவுளை தன் ஆயராகப் பாடுகிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் தான் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். யாரும் மற்றவர்க்கு கீழே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதுவும் அரசராக இருக்கிறவர், ஒரு நிலைக்கு வந்தவுடன், தன்னுடைய நிலையில் தான் இருப்பதை, வழக்கமாகக் கொண்டிருப்பார். ஆனால், தாவீதிடத்தில் அந்த பண்பை நாம் பார்க்க முடியவில்லை. அவர் அரசராக இருந்தாலும், கடவுளை ஆயராக ஏற்றுக்கொள்கின்ற அந்த மனநிலை, அவரது பணிவையும், கடவுள் மீது அவர் கொண்டிருக்கிற ஆழமான நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நாம் எந்த நிலையிலும் கடவுளுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நம் வாழ்வில் நாம் எப்போதுமே கடவுளின் மந்தையில் இடம்பெறக்கூடிய ஆடுகளாக இருக்க வேண்டும். அந்த பணிவை நமது வாழ்வில் வாழ, சிரத்தையுடன் முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.