ஆண்டவரே என் ஆற்றல்

ஒவ்வொருநாளும் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நாம் இயங்குவதற்கு, செயல்களைச் செய்வதற்கு ஆற்றலைத்தருகிறது. ஒரு வாகனம் இயங்க வேண்டுமென்றால், அதில் இருக்கிற எரிபொருள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் ஆற்றலால் வாகனம் இயங்குகிறது. ஆக, ஆற்றல் என்பது நம்மை இயக்குவதாக அமைகிறது. அது உணவாக இருக்கலாம், எரிபொருளாக இருக்கலாம். எல்லாமே இயக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இங்கே, ஆண்டவர் ஆசிரியரின் ஆற்றலாக இருக்கிறார் என்பதையும், ஆண்டவர் நம் ஆற்றலாக இருக்க வேண்டும் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

ஆண்டவர் எப்படி ஒருவரின் ஆற்றலாக இருக்க முடியும்? இந்த உலகத்தில் அநீதி ஏராளமாக நடக்கிறது. அந்த அநீதியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்க்கிறார்கள். தங்களால் இயன்ற மட்டும் எதிர்க்கிறார்கள். அதனால் பலவிதமான எதிர்ப்பையும் நம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சோர்ந்து போய் விடுகிறார்கள். எதற்காக நாம் மட்டும் இப்படி வாழ வேண்டும்? என்கிற எண்ணத்திற்கு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களை சோர்ந்துவிடாமல் இயக்குபவராக ஆண்டவர் இருக்கிறார். அவர்களுக்கு முழுமையான உற்சாகத்தையும், சோர்ந்து போகாமல் இருக்கக்கூடிய நல்ல மனதையும் ஆண்டவர் தருகிறார். இதைத்தான் எசாயா நூல் ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்.

நம்முடைய வாழ்விலும் நற்கருணை வாயிலாக ஆண்டவர் ஒவ்வொருநாளும் நமக்கு ஆற்றலைத் தருகிறவராக இருக்கிறார். நமக்கு எல்லா வகையான சோதனை நேரங்களிலும் உற்சாகம் கொடுத்து, உடனிருக்கிறவராக இருக்கிறார். அந்த ஆண்டவரிடம் நாம் எப்போதும், நன்றிக்குரியவர்களாக வாழ அருள் வேண்டுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.