ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு

திருப்பாடல் 27: 1, 2, 3, 13 – 14
”ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு”

சவுல் மக்களின் மனதில் தன்னைவிட பிரபலமாகிக்கொண்டிருந்த தாவீதைக் கொல்ல தேடுகிறார். அதற்கு காரணம் பொறாமை. எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம். தன்னை விட யாரும் புகழ்பெற்றுவிடக்கூடாது என்கிற அகம்பாவம். அவர்களை எதிரிகளாக பாவிக்கக்கூடிய முதிர்ச்சியற்ற தன்மை. இந்த பிரச்சனைக்கு அவர் கொலை தான், சரியான முடிவு என்று நினைக்கிறார். தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும், அவர்களை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார். அந்த கொலைவெறியோடு தாவீதைக் கொல்ல தேடுகிறார்.

அரசருடைய இந்த முடிவு தாவீதிற்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். அரசருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, இப்போது எதிரியாக தன்னைச் சித்தரிப்பதை அவர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். எந்த அளவிற்கும் செல்வதற்கு பயப்பட மாட்டார்கள். இந்த உலகமே அவருக்கு எதிராக நிற்பது போலத்தான் தாவீது பயந்துபோயிருப்பார். எங்கு சென்றாலும் கூடவே பய உணர்வும் இருந்திருக்கும். யாரோ தன்னை பின்தொடர்கிறார்களோ என்கிற மிரட்சி இருந்திருக்கும். தன்னுடைய உயிருக்கு எந்த பக்கத்தில் இருந்தும் ஆபத்து வரலாம் என்கிற சிந்தனை இருக்கிற மனிதன், எப்படி இயல்பாக இருக்க முடியும்? அந்த தருணத்தில் தாவீது அரசர், கடவுள் தன்னுடைய வாழ்க்கையில் செய்து வந்திருக்கிற அதிசயங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். தனக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பகைவர்கள் எப்படியெல்லாம் கடவுளின் வல்லமையால், தோற்றுப்போனார்கள் என்பதை நினைத்துப்பார்க்கிறார். அவர் தான், தன்னுடைய மீட்பு என்று முற்றிலுமாக கடவுளிடம் கையளிக்கிறார்.

இந்த உலகத்தில் தான் வளராவிட்டாலும், அடுத்தவர் வளர்ந்து விடக்கூடாது என்கிற எண்ணம் மனிதர்களின் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய பொறாமை எண்ணங்களை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று, இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. தூய்மையான எண்ணங்களை உடையவர்களாக நமது வாழ்வை நாம் அமைத்துக்கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.