”ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்”

நன்றி என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த நன்றி என்ற சொல்லின் பொருள் அறியாது, நன்றி இல்லாத ஒரு தன்மை இந்த உலகத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, நாம் வாழக்கூடிய இந்த உலகம், மற்றவர்களைப் பயன்படுத்த அதிக முயற்சி எடுக்கிறது. எந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்தி இலாபம் அடைய முடியுமோ, அந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்துவதில் அதிக மெனக்கெடுகிறது. பயன்படுத்திய பிறகு, அவர்களை தூர எறிந்துவிடுகிறது. இதுதான் நாம் வாழக்கூடிய உலகம். ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறவராக இல்லை. அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்து நலன்களுக்காகவும் நன்றி செலுத்துகிறார். அந்த நன்றியின் வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 18 – 19).

கடவுளிடத்தில் கேட்டதைப் பெற்றுவிட்டோம், இனி கடவுள் தேவையில்லை என்று, அவர் கடவுளை விட்டு விலகவில்லை. மாறாக, தன்னுடைய வேண்டுதலுக்காக என்னென்ன பொருத்தனைகளைச் செய்தாரோ, அவையனைத்தையும் அவர் செய்கிறார். தன்னுடைய வேண்டுதல்களும், பொருத்தனைகளும் கடவுள் மீது அவர் கொண்டிருக்கிற பக்தியை இன்னும் ஆழப்படுத்துகிறது. கடவுள் மீது அவருக்கு தனிப்பட்ட பாசத்தை வளர்த்தெடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் பார்வையற்ற ஒருவருக்கு இயேசு சுகம் கொடுக்கிற நிகழ்வு தரப்படுகிறது. இயேசு பல மனிதர்களுக்கு சுகம் கொடுத்தார். கடவுளின் அன்பைப் பெற்றுக்கொடுத்தார். பெற்றுக்கொண்ட அத்தனை பேரும் கடவுளுக்கு நன்றியுணர்வு உள்ளவர்களாக இருந்தனரா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியே. அந்த நன்றியுணர்வை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நமது வாழ்வில், நாம் எப்போதும் கடவுளுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். கடவுளை எந்நாளும் போற்றிப்புகழ வேண்டும். அவர் செய்த செயல்களை நன்றியோடு நினைத்துப்பார்த்து, எந்நாளும் அவரது திருப்பெயரைப் போற்றுவதற்கு, நாம் முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.