ஆண்டவரே! நீர் என்னை மீட்டீர்

யோனா 2: 2, 3, 4, 7

ஆண்டவர் தன்னை மீட்டதாக இறைவாக்கினர் யோனா முழுமையாக நம்புகிறார். யோனா இறைவாக்கினர் நினிவே நகரத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவர். கடவுளை முழுமையாக நம்புகிறவர். ஆனாலும், தன்னுடைய வார்த்தை எப்படியானாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவராக சித்தரிக்கப்படுகிறார். ”இன்னும் நாள்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும்” என்கிறார். ஆனால், மக்கள் மனம் மாறியதால் கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்கிறார்.

யோனா அறிவித்தபடி, நினிவே அழிக்கப்படவில்லை. இது யோனாவுக்கு கோபத்தை வரச்செய்கிறது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். மக்கள் தன்னை இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். இறுதியில் கடவுளை முழுமையாக அறிந்து கொள்கிறார். தன்னுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, இறைவன் எப்படியெல்லாம் அற்புதமாக தன்னைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்கிறார். இறைவன் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் மூலமாக உறுதிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்க்கையிலும், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். சாதாரண நிகழ்வுகளுக்கும் நாம் கடவுளை விட்டு வெகுதூரம் சென்றுவிடக்கூடாது. கடவுளோடு இருக்க வேண்டும். கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை நாம் வைக்க வேண்டும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.