ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!!!

உலகெங்கும் வாழ்பவரே!ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!பிற இனத்தார்களுக்கு அவரின் மாட்சியையும், வியத்தகு செயல்களையும் அறிவிப்பது நமது கடமை ஆகும். ஏனெனில் அவரே தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர். அஞ்சுதற்கு உரியவர் அவர் ஒருவரே.மற்ற தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே!நமது ஆண்டவரோ! விண்ணுலகையும்,மண்ணுலகையும் படைத்தவர்.

ஒவ்வொருநாளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவருக்கு பாடல் பாடுங்கள்; அவரை புகழ்ந்தேத்துங்கள்;அவரது ஆற்றலைத் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! அப்பொழுது அவரைத் தேடுவோரின் ஒவ்வொரு இதயமும் மகிழ்ந்து பெருமகிழ்ச்சிக் கொள்ளும்.

ஏனென்றால் நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறவர். அவர் நம்முடைய துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர். நாம் போற்றித்துதிக்கும் பொழுது அவரும் நம்மில் பிரியமாய் இருந்து நமது வேண்டுதல் யாவற்றையும் நிறைவேற்றித் தருகிறார். சில சமயம் கஷ்டமான சூழ்நிலையை கடக்க நேர்ந்தாலும் அவர் கரம் நம்மை வழிநடத்தும்.அந்த கஷ்டத்தின் மத்தியிலும் நம்மை சந்தோஷத்தால் சமாதானத்தால் நிறைத்துக் காத்துக்கொள்வார்.

துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மைபடுத்துவீர்கள், என்று திருப்பாடல்கள் 50 : 15 ல் வாசிக்கிறோம்.மனிதர்களாகிய நம்மேல் நினைவு கொள்வதற்கு நாம் யார்? நம்மை ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு நாம் எம்மாத்திரம்?ஆனாலும் நமது ஆண்டவர் நம்மேல் நினைவாக இருக்கிறார். நம்மை மீட்கவும் வாழ வைக்கவுமே அவர் இந்த பூமிக்கு இறங்கி வந்தார்.நம்மேல் உள்ள ஆழ்ந்த அன்பினால் நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்தார்.நம்முடைய இதயம் மகிழ வேண்டுமாய் அவர் சிலுவையில் அடிக்கப்பட்டு தாங்க முடியாத வலியோடு சிலுவையில் தொங்கினார்.அப்பேற்பட்ட கடவுளுக்கு கைம்மாறாக நாம் என்ன செய்யப் போகிறோம்?நம்முடைய நன்றியை எப்படி தெரிவிக்கப்போகிறோம். யோசியுங்கள்;செயல்படுங்கள். அவரைப்போற்றி துதிப்பது எவ்வளவு மென்மையானது,உயர்ந்தது என்று அறிந்து அவரின் திருவுளப்படி நடந்துக்கொள்வோம்.

எங்கள் அன்பின் மீட்பரே!!

உம்மை துதிக்கிறோம்,போற்றுகிறோம்.மனிதர்களின் இதயத்திலும், துதிகளின் மத்தியிலும் வாசம் செய்கிற தேவன் நீரே மனிதர்களாகிய நாங்கள் உமக்கு ஒரு பொருட்டாக இல்லைஎன்றாலும்,நீர் எங்கள் மேல் வைத்த பேரன்பினால் உமது இரத்தத்தைக் கொடுத்து எங்களை மீட்டுக்கொண்டீர்.இந்த நன்றியை நாங்கள் ஒருபோதும் மறந்து போகாதப்படிக்கு எங்கள் இதயத்தில் உம்மையே வழிப்பட்டு உமக்கு புகழ்பாட உதவிச் செய்யும்.நாங்கள் பாவம் செய்யாதபடிக்கு காத்துக்கொள்ளும். எங்கள் குற்றம்,குறைகளை அனுதினமும் மன்னித்து காத்தருள வேண்டுமாய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அன்பின் தகப்பனே!!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.