ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 (3b)

இந்த உலகத்திலே பணத்தைத் தேடுகிற மனிதர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். புகழுக்காக, அதிகாரத்திற்காக, வெற்றுப்புகழ்ச்சிக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில், கடவுளைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள். அவர்களிலும் பலர், தேவைக்காகவே கடவுளைத் தேடுகிறார்கள். கடவுளை தங்களது தேவைகளை நிறைவேற்றித்தரும், ஒரு வல்லமையுள்ளவராகப் பார்க்கிறவர்களே அதிகம். இங்கே, “ஆண்டவரைத் தேடுகிறவர்களாக“ திருப்பாடல் ஆசிரியர் சொல்வது, மேற்சொன்ன மனிதர்களை அல்ல. மாறாக, அனைத்தையும் இழந்து, இறைவன் ஒருவர் தான் உண்மை என்று, உண்மையான மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆண்டவரைத்தேடுகிறவர்களையே குறிப்பிடுகிறார். அவர்கள் இறைவனை தேடுவதிலே மகிழ்ச்சி காண வேண்டும் என்பது அவரது அறிவுரையாக இருக்கிறது.

கடவுளை நமது வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடுவதுதான் உண்மையான மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும். எதிர்பார்ப்புக்களோடு தேடுகிறபோது, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஒருவிதமான வெறுமை எப்போதுமே நம்மை ஆட்கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும். நாம் அனைவரும் கடவுளை மட்டும் தேடுவதற்கு தயாராக இருக்கிறோமா?

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.