ஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் அவர் நல்லவர்

திருப்பாடல் 135: 1 – 2, 3 – 4, 5 – 6

இன்றைக்கு மேடைப்பேச்சுக்களிலும், அரசியல் பேச்சுக்களிலும் “புகழ்ச்சி” என்கிற வார்த்தை மிதமிஞ்சி இருப்பதை நாம் கேட்டிருக்கலாம். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு, இன்றைக்கு தங்களது தலைவர்களை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பேச்சினால் மயக்க விரும்புகிறவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்றைக்கு மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறபோது, 90 விழுக்காட்டிற்கு மேல், பொய்மைத்தன்மை தான் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், கடவுளைப் புகழ்கிறபோது, என்ன காரணத்திற்காக புகழ வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கிக்கூறுகிறது.

மற்றவர்களை வெறுமனே மகிழ்ச்சிப்படுத்துவதற்காக புகழ்வதுபோல, நாம் கடவுளைப் புகழக்கூடாது. மாறாக, கடவுளிடத்தில் இருக்கிற பண்புகளின் அடிப்படையில் நமது புகழ்ச்சி உண்மையானதாக அமைய வேண்டும். கடவுளை ஏன் புகழ வேண்டும்? கடவுள் நல்லவராக இருக்கிறார். அதாவது நன்மைகளைச் செய்கிறவராக இருக்கிறார். உள்ளத்தில் வெறுப்புணர்வும், வஞ்சகமும் இல்லாமல், தன்னைத் தேடி வருகிற பக்தர்கள் அனைவருக்கும் நிறைவான அருளை வாரி வழங்கக்கூடியவராக கடவுள் இருக்கிறார். எனவே, அவரைப்போற்ற வேண்டும். கடவுளைப் புகழ வேண்டும்.

கடவுள் எப்போதும் நல்லவர் தான். நம்முடைய தவறுகளை எண்ணிப்பார்க்காமல், நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை உள்ளவராகவும், நமக்கு நன்மை செய்வதில் கருத்துள்ளவராகவும் இறைவன் இருக்கிறார். அத்தகைய பண்புகள் கொண்ட இறைவனை நாம் தொடர்ந்து போற்றுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.