ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்

திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21
”ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்”

ஓபேதுஏதோம் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்த கூடாரத்தில் வைத்தனர். அங்கே அனைவரும் இணைந்து ஆடிப்பாடி மகிழ்வதுதான், இந்த திருப்பாடலின் பிண்ணனி (1குறிப்பேடு 16: 1..). இது கடவுளுக்கு செலுத்தும் நன்றிப்பா. அங்கேயிருந்த மக்கள் அனைவரும் கடவுளை ஆடிப்பாடி மகிழ்விக்கின்றனர். கடவுள் அவர்களுக்குச் செய்திருக்கிற நன்மைகளை அறிக்கையிட்டு, எந்நாளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ உறுதி எடுக்கின்றனர்.

“நினைவுகூறுதல்” என்பது ஒருவர் செய்த செயல்களை எண்ணிப்பார்ப்பது. நல்லவற்றை திரும்பிப்பார்ப்பதும், கெட்டவற்றை மறப்பதும் இங்கு நமக்கு விடுக்கப்படுகிற அழைப்பு. ஆனால், மனிதர்களாகிய நாம் அதை அப்படியே மாற்றி கடைப்பிடிக்கிறோம். நல்லவற்றை மறந்துவிடுகிறோம். கெட்டவற்றை வாழ்வில் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இது நமது வாழ்விற்கு எப்போதுமே ஆபத்து விளைவிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இதே சிந்தனையை நமது ஆன்மீக வாழ்விலும் தொடர்கிறோம். கடவுள் நமக்கு செய்து வந்திருக்கிற பல நன்மையான காரியங்களை நாம் வெகு எளிதாக மறந்துவிடுகிறோம். அதனை பொருட்படுத்துவது கிடையாது. அதனை கடவுள் நமக்கு கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது என்கிற, இறுமாப்புமிக்க எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனை விடுத்து, நாம் எந்நாளும் கடவுளுக்கு நன்றி உணர்வு உள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.

கடவுள் நமக்கு நன்மைகளைச் செய்கிறவராக இருக்கிறார். தன்னுடைய படைப்பாம் மனிதர்களை வாழச்செய்வதற்கு பல வழிகளை ஏற்படுத்தித் தரக்கூடியவராக இருக்கிறார். அவர் நமக்கு செய்து வருகிற எல்லா நன்மையான செயல்களையும் நன்றியோடு நினைத்துப்பார்த்து, அவருடைய பிள்ளைகளாக நாம் வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.