ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவிற்கொள்கின்றார்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தொடக்கநூல் 17: 7 ல் பார்க்கிறோம். ” தலைமுறை, தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால், உனக்கும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்”. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும். கடவுள் அவர்களுக்கு துணையாக இருப்பார் என்பதுதான் இந்த உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள் மீறி பாவம் செய்தார்கள். அவர்கள் வேற்று தெய்வங்களை ஆராததித்தனர். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து, பார்வோனின் அடக்குமுறையிலிருந்து விடுவித்த இறைவனை மறந்து, வேற்று தெய்வத்தை நாடினர். இதனால், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். வேற்றுநாட்டினர் அவர்களை அடிமைப்படுத்தினர். யாவே இறைவன் அவர்களோடு இருந்தவரை, மற்றவர்களால் இஸ்ரயேல் மக்களை நெருங்க முடியவில்லை. ஆனால், அவர்கள் உண்மையான தெய்வமாகிய யாவே இறைவனைவிட்டு பிரிந்தபோது, அவர்கள் வேதனையை அனுபவித்தனர். இவ்வளவு நன்றி மறந்த நிலையிலும், யாவே இறைவன் அவர்களைக் கைவிட்டு விடவில்லை. அவர் தான் இஸ்ரயேல் மக்களோடு செய்த உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருந்தார். அவர்கள் கடவுளை விட்டுச்சென்றாலும், இறைவன் அவர்களை கைவிடாத தெய்வமாக இருந்தார். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே குறிப்பிடுகிறார்.

இறைவன் நம்மோடும் உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஒவ்வொரு அருட்சாதனத்தைப் பெறுகிறபோதும், நாமும் கடவுளோடு உடன்படிக்கை செய்துகொள்கிறோம். கடவுள் எந்நாளும் உண்மையாக இருக்கிறார். ஆனால், நாம் கடவுளுக்கு உண்மையாக இருப்பதில்லை. அந்த நிலை மாற, நாம் கடவுளின் அருள் வேண்டி, நாம் கொடுக்கும் வாக்குறுதியில் நிலைக்க வேண்டி, மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.