ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக

இந்த திருப்பாடலை தாவீது அரசர் எழுதியபோது இயற்கைச்சீற்றங்கள் நிறைந்த ஒரு சூழலாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. மழை, மின்னல், இடி போன்ற இயற்கைச்சீற்றங்களின் தாக்கம் அதிகமாக இருந்த ஒரு சூழலை நாம் எதிர்கொண்டால் எப்படி இருக்கும்? பயம், கலக்கம், அச்சம் நம்மில் அதிகமாக இருக்கும். ஆனால், தாவீது அரசர் இயற்கையின் சீற்றத்திலும் கடவுளின் வல்லமையை, ஆற்றலை பார்க்கிறார். எந்த அளவுக்கு கடவுள் வலிமையும், வல்லமையும் படைத்தவராக இருக்கிறார் என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட நெருக்கடியான நிலை இயற்கையில் மட்டுமல்ல. நமது வாழ்விலும் எதிரொலிக்கிறது. இந்த நெருக்கடியான நிலை குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களின் வாழ்விலும் எதிரொலிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வாழும், வாடும் மனிதர்களுக்கு அமைதியைத்தர வேண்டுமென்று ஆசிரியர் மன்றாடுகிறார். ஏனென்றால், உண்மையான அமைதியை ஆண்டவர் ஒருவர் மட்டும் தான் வழங்க முடியும். அந்த அமைதியை வழங்கக்கூடிய ஆண்டவரில், தூய ஆவி நிழலிடுவதை இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துரைக்கிறது. அத்தகைய உண்மையான அமைதியை தருவதற்காக இறைமகனே வந்திருப்பதை, தூய ஆவியானவர் வழியாக, தந்தை சுற்றி இருந்த அனைவருக்கும் எடுத்துரைக்கிறார்.

நமது வாழ்வில் கலக்கம், கவலை, துன்பம் வருகிறபோது, அமைதியை அருளக்கூடிய இறைவன் மட்டில் நாம் முழுமையான நம்பிக்கை வைத்து, எந்நாளும் அவருடைய வல்லமையில் முழுமையான நம்பிக்கை வைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.