ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8
”ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்”

இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது.

கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக, பாவத்தினால் முடக்குவாதமுற்ற நிலையில் இருந்த மனிதருக்கு இயேசு சுகம் கொடுக்கிறார். கடவுள் இருக்கிறபோது, பாவிகளும், முழுமையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை, இது வெளிக்காட்டுகிறது.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற அந்த நம்பிக்கை, நமது வாழ்க்கையில் நாம் எப்போதும், எதற்கும் கவலைப்படாது, மகிழ்வாய் வாழ உந்துசக்தியாய் இருக்க வேண்டும். நாம் தவறு செய்வதற்கு வழிசெய்து விடக்கூடாது. வாழ்க்கையை கடவுளுக்கு பிரியமான முறையில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.