ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்

திருப்பாடல் 25: 4 – 5, 6 – 7, 8 – 9
”ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்”

கடவுள் எப்படிப்பட்டவர்? என்பது பற்றி யூதர்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். கடவுளை நீதிபதியாக, தண்டிக்கிறவராக, கடுமையானவராக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். பாவம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்த யூதர்கள், கடவுளின் மற்றொரு பக்கத்தை சரியாக கணிக்கத் தவறிவிட்டனர் என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய பார்வையின் மறுபக்கத்தை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

கடவுள் பாவிகளுக்கு நல்வழி காட்டுகிறவராக சித்தரிக்கப்படுகிறார். கடவுள் பாவிகள் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பவரல்ல, மாறாக, அவர்கள் திருந்தி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறவர். நாம் செய்கிற பாவங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், அந்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறபோது, மன்னிப்பும் உண்டு என்பதை, இந்த வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆக, பாவம் என்பதற்கு மாற்றாக, கடவுள் காட்டும் நல்வழியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பாவம் தொடர்பான சிந்தனைகள் அகல, நாம் கடவுள் காட்டும் நல்ல வழிமுறைகளை நமது வாழ்வில் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

நமது வாழ்வில் எப்போதும் பாவம் என்னும் சிந்தனையோடு வாழப்பழகி விட்டோம். அதனைக் கடந்து, கடவுள் தரும் மன்னிப்பைச் சுவைப்பதற்கு நாம் பழக உறுதி எடுப்போம். எப்போதும் கடவுளின் குரலைக்கேட்டு, அவர் காட்டும் வழியில் நடந்து நல்ல மக்களாக வாழ, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.