ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்

எரேமியா 31: 10, 11 – 12b, 13
”ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்”

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக நெபுகத்நேசர் மன்னரால் நாடு கடத்தப்பட்டனர். அது கடவுள் கொடுத்த தண்டனையாகவே அவர்கள் பார்த்தார்கள். தாங்கள் கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் புறக்கணித்ததற்காக பெற்றுக்கொண்ட தண்டனை தான் இது என்று எண்ணிக்கொண்டார்கள். அவர்களுக்கு வேற்றுநாட்டில் இருப்பது மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தாலும், கடவுளுக்கு எதிராக தாங்கள் செய்த பாவத்தையும், நன்றி மறந்த நிலையையும் நினைத்துப்பார்த்தபோது, இந்த தண்டனைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று, தங்களையே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். இது தான் அவர்களின் மனமாற்றம். என்றைக்கு நாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறோமோ அது மனமாற்றத்தின் தொடக்கமாக அமைகிறது. இந்த நிலையில் கடவுள் அவர்களை மன்னித்து, அவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ஆசீர்வாதங்களை இறைவாக்கினர் வாயிலாக அறிவிக்கின்றார்.

கடவுள் தன் மக்களை ஆயர் மந்தையைக் காப்பது போல, காத்து வழிநடத்துவதாக இறைவாக்கினர் பாடுகிறார். அவர் மீண்டும் மக்களை, சொந்த நாட்டிற்கு, கடவுள் அவர்களுக்கு கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வார். பாபிலோனியர்கள் வலிமையானவர்கள் தான். இவர்களிடமிருந்து கடவுள் நம்மை எப்படிக் காக்கப்போகிறாரோ? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், சாதாரண மக்களாக இருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் என்றால், இங்கே கடவுளின் வல்லமையை ஒருவர் உணர்ந்திருக்க முடியும். கடவுளுக்கு அது எளிதானது. மக்கள் ஆயருடைய குரலுக்கு செவிகொடுக்க வேண்டும். ஏற்கெனவே, ஆயருடைய குரலுக்கு எதிராகச் சென்றதுபோல சென்றால், அவர்களுக்கு மீண்டும் அழிவே வரும். இப்போதாவது, அவர்கள் ஆயருடைய குரலுக்கு கவனமுடன் செவிகொடுக்க வேண்டும் என்று இறைவாக்கினர் அறைகூவல் விடுக்கிறார்.

நமது வாழ்க்கையில் நன்மை எது? தீமை எது? என்று நாம் அறிந்திருந்தாலும், தீமை செய்வதைத்தான் மனம் விரும்புகிறது. தீயதை நாம் நாடுகிறோம். கடவுளுடைய குரலுக்குச் செவிமடுத்து, நாம் எப்போதும் கடவுளின் பிள்ளைகளாக வாழ உறுதி எடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.