ஆறுதலின் இறைவன்

பிரிவிற்கும், நோன்பிற்குமான தொடர்பை இன்றைய வாசகம் விளக்கிக்காட்டுகிறது. பிரிவு என்பது பலவிதங்களில் நாம் வாழ்வில் அனுபவிக்கக்கூடிய ஒன்று. நமக்கென்று பல நண்பர்கள் இருப்பார்கள். அவர்களோடு நமக்கு ஒரு சில நேரங்களில், மனக்கசப்பு ஏற்படலாம். நமக்கும் அவர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்படலாம். அது தற்காலிகப் பிரிவை நிச்சயம் ஏற்படுத்தும். சில உறவுகள் நிரந்தரப் பிரிவுகளாக இருக்கும். இழப்பு மற்றும் இறப்பு நமக்கு ஆழாத்துயரை ஏற்படுத்தும் பிரிவாக இருக்கிறது. ஆக, பிரிவு என்பது நமக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

நோன்பு என்பது நம்மை இறைவன்பால் ஈடுபடுத்துவதற்கான முயற்சி ஆகும். இன்றைக்கு நோன்பிருந்து கால்நடையாக பல திருத்தலங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். நோன்பிருந்து செபிக்கிறார்கள். இவையனைத்துமே இறைவனை அடைவதற்கான ஒரு தேடலே ஆகும். இந்த நோன்பு, நம்மை கடவுள்பக்கம் ஈர்ப்பதாக அமைகிறது. அவரோடு நெருங்கி வருவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆக, நோன்பு என்பது கடவுளின் துணையை நாடுவதற்கான ஒரு செயல்பாடாக அமைகிறது. பிரிவில் நாம் நோன்பிருக்கும்போது, இறைவனின் ஆறுதல் நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. ஏனென்றால், பிரிவு நமக்கு மனவேதனையைத் தந்திருக்கிறது. அந்த மனவேதனையைத் தணிக்கிறவிதமாக, நோன்பு நமக்கு கடவுளின் ஆறுதலைப் பெற்றுத்தருகிறது. இந்த நற்செய்தி தரும் படிப்பினை இதுதான்: நமது வருத்தமான தருணங்களில் நமது ஆறுதல் இறைவன் மட்டுமே.

இறைவன் ஒருவர் தான் நமக்கு, நிரந்தரமான ஆறுதலைத்தர முடியும். அது எத்தகைய பிரிவாக இருந்தாலும், இழப்பாக இருந்தாலும், இறைவன் ஒருவர் தாம், நமக்கு நிரந்தரமான உடனிருப்பை வழங்க முடியும். நண்பா்கள் ஒருநாள் நம்மோடு இருக்கலாம், மறுநாளில் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து விடலாம். ஆனால், இறைவன் ஒருவர் மட்டும்தான், நம்மை எந்நாளும் உடனிருந்து, ஆறுதல்படுத்தக்கூடியவராக இருக்கிறார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.