ஆவியின் செயல்பாடு

உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான போராட்டம் ஒரு மனிதனின் வாழ்வில் நீண்ட, நெடிய போராட்டமாக இருந்து வருகிறது. ஆன்மா, உடலில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து போராடி வெளியே வருவதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் எது பெரியது, என்கிற கேள்வியை விட, எதற்கு அதிக முக்கியத்துவம் என்பதனை, இயேசு விளக்குகிறார். வாழ்வு தரக்கூடியது, முடிவில்லாதது ஆவி தான் என்கிறார். இது உடலின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிடுவது ஆகாது. ஆனால், அதே வேளையில், ஆவியின் இயல்புகளை, அதன் மதிப்பை இது அதிகப்படுத்திக் காட்டுகிறது.

வெறும் உடல் ஆசைக்காக சாப்பிடுவது பெருந்தீனிக்கு சமமானது. ஆனால், நன்றாக உழைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று அதற்காக சாப்பிடுவது, உடலின் இயக்கத்திற்கு, ஆவியின் தூண்டுதலுக்கும் பயன்படுவதாக அமைகிறது. ஆக, நமது எண்ணம், நமக்குள்ளாக இருக்கிற இந்த ஆவியை இயக்குவதாக அமைய வேண்டும். அந்த ஆவி தன்னெழுச்சி பெற வேண்டும். அது நம்மை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நீதி மற்றும் நேர்மையின் சார்பான போராட்டங்களில், நம்மை ஈடுபட வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உடல் அழகைப் பேணிப்பாதுகாப்பதிலும், உடலின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக சிரத்தை எடுக்கும் நாம், நிறைவைத்தருகிற, நிம்மதியைத் தருகிற ஆவியின் செயல்பாடுகளை ஊக்குவிக்க, அது இயக்கப்படுவதற்கு தேவையான காரியங்களைச் செய்ய நாம் முழுமுயற்சி செய்யாமல் இருக்கிறோம். அதற்கான காரியங்களை நாம் முன்னெடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.