இது என் உடல்

இயேசுவின் சதை என்பது அவரது மனிதத்தன்மையை பறைசாற்றுவதாக இருக்கிறது. யோவான் தனது முதல் திருமுகத்தில் இதை தெளிவாக விளக்குகிறார். ”இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல்”.

யோவான் இயேசு நம்மில் ஒருவர் என்கிற செய்திக்கு அழுத்தம் தருகிறார். இயேசுவில் கடவுளை நாம் அறிகிறோம். இதுநாள்வரை கடவுள் எப்படி இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இயேசுவில் நாம் கடவுளை கண்கூடாக பார்க்கிறோம். நமது வாழ்க்கைச்சூழலில் துன்பங்கள், வறுமை, நஷ்டங்கள், பலவீனங்கள், போராட்டங்கள் இயல்பாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நாம் இயேசுவை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் நமது சுமைகளை தாங்கியிருப்பதை எண்ண வேண்டும். அவர் நமக்காகத்தான் இந்த உடலை எடுத்தார். நமக்காக தன்னையே அவர் கையளித்தார். நமக்காக நொறுக்கப்பட்டார். அவருடைய மண்ணகப்பிறப்புதான், இந்த உடலின் புனிதத்தன்மையை நமக்கு எடுத்துக்காட்டியது. உடலும் புனிதமானது என்கிற உண்மையை நமக்குப்பறைசாற்றியது. ஆக, உடலின் புனிதத்தன்மையை நாம் பேணிக்காக்க வேண்டும்.

இன்றைக்கு புனிதமான இந்த உடல் பலவித வடிவங்களில் சிதைத்துச் சூறையாடப்படுகிறது. அதனுடைய புனிதத்தன்மை கெட்டுப்போய் இருக்கிறது. உடலின் புனிதத்தன்மையை நாம் உணர வேண்டும். அதன் புனிதத்தன்மையை போற்றிப்பாதுகாப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.