இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார்.

இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட நோய்கள் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. மன அமைதியையும் இதனால் மனிதன் இழந்துவிட்டான். இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால், மீண்டும் நாம் இயற்கையோடு இணைந்து வாழ ஆரம்பிக்க வேண்டும். இயற்கையை அழிப்பதை நிறுத்த வேண்டும். பணத்திற்காக இயற்கை வளங்களைச் சுரண்டுவதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இயற்கையை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற நமது எண்ணம் சரியானதாக இருந்தாலும், அதனை முழுமையாகச் செயல்படுத்த நம் ஒருவரால் முடியாது. ஆனால், தனிப்பட்ட நமது வாழ்வில் இயற்கையைச் சீரழிக்காதவாறு வாழ, நாம் உறுதியும், முயற்சியும் எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.