இயேசுவின் அர்ப்பண வாழ்வு

செய்யக்கூடிய பணியில் முழுமையான அர்ப்பண உணர்வு வேண்டும். அதுதான் நம்மை மற்றவர்களிடமிருந்து தனித்துவமிக்க மனிதராகக் காட்டும் என்பதை, இயேசு தனது வாழ்வின் மூலமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இன்றைய நற்செய்தியின்(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44)  நிகழ்வுகள் அழகாக, வரிசையாக, நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். நிச்சயம் போதிப்பது எளிதான காரியமல்ல. கூடியிருக்கிற மக்கள் அனைவருக்கும், கேட்கும் விதத்தில், புரியும் விதத்தில் போதிப்பது, நமது பொறுமையை, வலிமையை சோதிக்கக்கூடிய தருணம். அவ்வளவு கடினமான பணியைச் செய்துவிட்டு, இயேசு பேதுருவின் மாமியார் வீட்டிற்கு சற்று இளைப்பாற வருகிறார். வந்த இடத்தில் பேதுருவின் மாமியார் இருக்கிற நிலையைப் பார்த்து, தனது களைப்பைப் பார்க்காமல் அவருக்கு உதவுகிறார். அவரிடமிருந்து காய்ச்சலை அகற்றுகிறார்.

இவ்வளவு நேரம் இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் அங்கிருப்பதைக் கண்டு, நோயாளிகளை அவரிடத்தில், குணப்படுத்துவதற்காகக் கொண்டு வருகின்றனர். நிச்சயம் ஏராளமான எண்ணிக்கையில் வந்திருப்பார்கள். பொறுமையாக, ஒவ்வொருவரின் மீதும் கைகளை வைத்து செபிக்கிறார். குணம் பெற்றுத்தருகிறார். அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு, தந்தையிடம் செபிப்பதற்காக, தனிமையான இடத்திற்குச் செல்கிறார். மீண்டும் அடுத்தநாள் மக்கள் கூட்டமாக வருகிறார்கள். அவர்களை பொறுமையோடு அனுப்புகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஊர்களுக்கு, தன்னுடைய சீடர்களை அழைத்துச் செல்கிறார். இவ்வாறு எந்த கோபத்திற்கும் இடங்கொடுக்காமல், நிதானத்தை இழக்காமல், மக்களுக்காக தனது வாழ்வையே முழுமையாக இயேசு அர்ப்பணித்திருப்பதற்கு இதனைவிட வேறு சான்றுகள் எதனையும் கொடுக்க முடியாது.

இயேசுவிடத்தில் இருந்த அந்த அர்ப்பண உணர்வு நமக்கும் வேண்டும். நாம் செய்யக்கூடிய பணிகளில் முழு ஈடுபாடு நமக்கு வேண்டும். அந்த முழுமையான ஈடுபாட்டோடு, நமது பணிவாழ்வில் முழுமையாக ஈடுபடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.