இயேசுவின் இதயத்தை பெற்றிருப்போம்

நாம் பேருந்திற்காக காத்திருக்கிறபோது, நாம் இரயிலில் பயணம் செய்கிறபோது பிச்சைக்காரர்கள் நம்மிடத்தில் பிச்சை கேட்டு வருகிறபோது, ”இவர்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா?” என்று நமக்குள்ளாக கடிந்திருப்போம். ”உழைத்து சம்பாதிக்க வேண்டியதுதானே?” என்று அறிவுரை கூறியிருப்போம். இல்லையென்றால் பாராமுகமாய் இருந்திருப்போம். நாம் மட்டுமல்ல, அனைவருமே இப்படித்தான் பிச்சைக்காரர்களைப் பார்ப்போம். ஆனால், நம்மிடம் உதவி கேட்டு வரும் அனைவரையுமே, இயேசுவாக பார்க்க வேண்டும் என்று நற்செய்தி அழைப்புவிடுக்கிறது.

இயேசுவை நாம் பார்த்ததில்லை. அவருடைய தோற்றத்தை நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால், உதவி கேட்டு இயலாமையில் வரும் அனைவருமே, இயேசுவின் சாயலில் உள்ளவர்கள் என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்கு தெளிவாக்குகிறது. இந்த நற்செய்தி இரண்டு எளிய சிந்தனைகளை நமது மனதில் பதிக்கிறது. 1. நாம் இயேசுவின் மனநிலையில் பார்க்க வேண்டும். 2. நாம் இயேசுவை அவரில் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மனப்பாங்கும் நம்மிடம் இருக்கிறபோது, நிச்சயம் நம்மால் மற்றவர்களை அன்பு செய்ய முடியும். மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது கடினமான காரியங்களை அல்ல. நம்மால் செய்யமுடிகிற எளிதான காரியங்கள். பணத்தை அடிப்படையாக வைத்து அல்லாமல், மனதை அடிப்படையாக வைத்து செய்யப்படுகிற காரியங்கள். அதனை நாம் செய்கிறபோது, கடவுளின் கைம்மாறு நமக்கு கிடைக்கும்.

இயேசுவின் மனநிலையில் நமது வாழ்வை நாம் அணுகுவோம். நாம் செய்யக்கூடிய சிறிய, சிறிய காரியங்களிலும் கடவுளின் இரக்கம், அன்பு வெளிப்படும்படியாக செய்வோம். நம்மோடு வாழக்கூடிய சகமனிதர்களை அன்பு செய்வோம். அன்பு ஒன்றுதான் நம்மை கடவுள் அருகில் நாம் செல்வதற்கு வழிகாட்டியாக விளங்க முடியும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.